டெல்லி: இந்திய அரசின் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation - ONGC) கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் மொத்த உற்பத்தி கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 6.5% அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது.
உலக அளவிலேயே சராசரியாக 3 - 4 சதவிகிதம் தான் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியைக் காட்ட முடியும். ஆனால் ஒரு இந்திய நிறுவனம் அதுவும் அரசு நிறுவனம் உலக நிறுவனங்களுக்கு சவால் விடும் விதத்தில் ஒரே வருடத்தில் 6.5 சதவிகிதம் உற்பத்தியை (கடந்த நிதி ஆண்டை விட) அதிகரித்துக் காட்டி இருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மொத்த உற்பத்தி 2018 - 19 நிதி ஆண்டில் 25.9 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மொத்த உற்பத்தி 24.61 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்தது.
ஒரு நாள் உற்பத்தி
2018 19 நிதி ஆண்டில் தான் ஓஎன்ஜிசி தன் வரலாற்று உச்சமாக ஒரே நாளில் 71 மில்லியன் ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் உற்பத்தி செய்து சாதனை படைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த நவம்பர் 2018-ல் தான் இந்த சாதனையை செய்தது ஓஎன்ஜிசி.
இலக்கு
வரும் 2021 - 22 நிதியாண்டிற்குள் ஒரே ஆண்டில் 42 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஓஎன்ஜிசி. காரணம் வரும் 2022-க்குள் இந்தியா தன் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவிகிதத்தை குறைத்துக் கொள்ள இலக்கு வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா தனது எரிவாயு தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது. அதனால் தான் உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்து இறக்குமதிகளைக் குறைத்துக் கொள்ள உழைத்து வருகிறது.
உலக தேவை
உலக அளவில் எரிசக்தியாக பயன்படுத்தப்படும் எரிபொருட்களில், இயற்கை எரிவாயு தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இயற்கை வாயு தான் முதன்மை எரிசக்தி பொருளாகவும் பார்க்கப்படுகிறது. மற்ற எரிவாயு மற்றும் எரிபொருட்களை எரித்து வெளியாகும் கரியமில வாயு மற்றும் கார்பன் போன்றவைகளை ஒப்பிடும்போது இயற்கை எரிவாயு மிகக் குறைந்த அளவிலேயே மாசு ஏற்படுத்துகிறது.
அதிகரிக்கும் நுகர்வு
அதோடு இந்த இயற்கை எரிவாயுவின் தேவை பல்வேறு இடங்களில் நேரடியாக இருந்து வருகிறது. உதாரணமாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு. வாகனம் ஓட்டுவதில் தொடங்கி சமையல் வரை இந்த இயற்கை எரிவாயுவின் தேவை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது.
அதிகரித்த விற்பனை
இயற்கை எரிவாயு மட்டுமின்றி இயற்கை எரிவாயு விற்பனையிலும் இந்த 2018 -19 ஆம் ஆண்டில் புதிய உச்சங்களை பெற்றிருக்கிறது ஓஎன்ஜிசி. கடந்த 2018 - 19 நிதியாண்டில் 20.472 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுக்களை விற்றிருக்கிறார்களாம். இதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் 19.49 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை மட்டுமே விற்றதாகச் சொல்கிறது ஓஎன்ஜிசி.
உலகில் மிகப் பெரிய முதலீடு
இன்னும் பல புதிய பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி முனைப்போடு செயல்பட்டு வருகிறதாம். ஓஎன்ஜிசி புதிய எரிவாயு திட்டங்களுக்காக 57 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறதாம். உலகிலேயே ஒரு இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு இத்தனை பெரிய தொகையை முதலீடு செய்வது உலகிலேயே இதுவே முதல் முறை எனவும் ஓஎன்ஜிசி பெருமைப்பட்டிருக்கிறது. இந்த 57 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வங்கக் கடலில் KG-DWN-98/2 இடத்தில் இருந்து இயற்கை எரிவாயு எடுப்பதற்கு பயன்படுத்தப் போகிறார்களாம்.