டெல்லி: சோனி மொபைல் ஃபோன்களின் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த சோனி நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு பிரிவில் இருக்கும் 50 சதவிகிதம் அதாவது 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருந்தாலும் அதில் சில குறிப்பிட்ட பேர்களை மட்டும் வேறு பிரிவுக்கு மாற்றப்படலாம் என்றும் தெரிகிறது.
ஆண்ட்ரைய்டு ஃபோன்களின் வருகையால் ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டிலும் இதுபோல் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
விற்பனை கடும் சரிவு
ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன்களின் தொடக்க காலமான 2008ஆம் ஆண்டுகளில் உலகின் முன்னணி ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையில் சோனி மொபைல் ஃபோன்கள் முதல் 5 இடத்தில் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தினந்தோறும் ஒரு புதிய மாடல்களில் ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களின் வருகையால் சோனி மொபைல் ஃபோன்களின் விற்பனை படிப்படியாக சரிய ஆரம்பித்தது.
2018ல் 1 சதவிகிதம் மட்டுமே
ஜப்பானை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சோனி நிறுவனத்தின் மொபைல் ஃபோன்களின் விற்பனையானது கடந்த 2010ஆம் ஆண்டில் 1.25 கோடியாக இருந்தது. நாளடைவில் படிப்படியாக குறைந்து கடந்த 2018ஆம் ஆண்டில் விற்பனை 54 லட்சமாக படுத்துவிட்டது. சர்வதேச அளவில் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையில் சோனி மொபைல்களின் விற்பனை 1 சதவிகிமாக குறைந்துவிட்டது.
எல்லாம் மேட் இன் சீனாதான்
சர்வதேச சந்தையில் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனையில் சாம்சாங் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து 2ஆம் இடத்தில் ஹூவாய், 3ஆம் இடத்தில் ஆப்பிள், சியோமொ 4வது இடத்திலும், ஒப்போ மற்றும் விவோ முறையா 5 மற்றும் 6வது இடத்திலும் சீனா தயாரிப்புகளே உள்ளன.
2000 ஊழியர்களுக்கு கல்தா
அதிவேக ஸ்மார்ட் ஃபோன்களின் வருகையால் சோனி மொபைல் ஃபோன்களின் விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த சோனி நிறுவனம் வேறு வழியில்லாததால் தன்னுடைய ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு பிரிவில் இருக்கும் 50 சதவிகிதம் அதாவது 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேறு பிரிவுக்கு மாற்றம்
ஸ்மார்ட் ஃபோன் பிரிவிலிருந்து 50 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக சொன்னாலும், அதில் குறிப்பிட்ட சில பேர்களை மட்டும் பேறு பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு
சோனி நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு பிரிவில் இருந்து 2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தாலும் அதை 2020ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தும் என்று தெரிகிறது. இதே போல் கடந்த 2009ஆம் ஆண்டிலும் 2000 ஊழியர்களையும், கடந்த 2015ஆம் ஆண்டில் மேலும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.