டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த பிப்ரவரி 12, 2018 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையை செல்லாது என அறிவித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பினால் தற்போது ஆர்பிஐ விசாரித்து வரும் 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடன்களை வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சொல்லப் போனால் வசூலிக்க முடியாமல் கூடப் போகலாமாம்.
கடந்த பிப்ரவரி 12, 2018 அன்று, உர்ஜித் படேல் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். அப்போது 2000 கோடி ரூபாய்கு மேல் வாராக்கடன் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் உடனடியாக வராக்கடன்களை வசூலிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் கடனை திரும்ப செலுத்த இயலாதவராக அந்த நிறுவனங்களையோ தனி நபர்களையோ அறிவித்து விட வேண்டும். அதோடு IBC - Insolvency and Bankruptcy code-ன் கீழ் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கடன்களை திரும்ப வசூலிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
வங்கி நடவடிக்கைகள்
இதனால் வங்கிகளும் உடனடியாக 2000 கோடி ரூபாய்க்கு மேல் வாராக்கடன் வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இந்த நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது மின்சாரம், சர்க்கரை, உரங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் தான். மேலே சொன்ன நிறுவனங்கள் அனைத்துமே ஆர்பிஐயின் இந்த பிப்ரவரி 12, 2018 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை எதிர்த்தது. அவ்வளவு ஏன் சில நிறுவனங்கள் நீதிமன்றங்களில் வழக்கு கூட தொடுத்தது.
தவறான அறிவிப்பு
மேலே சொன்ன துறை சார்ந்த நிறுவனங்கள் "எங்களை, ஆர்பிஐ, தவறாக கடனை திரும்ப செலுத்த இயலாதவர்கள், என அறிவித்துவிட்டது. எங்களால் கடனை திரும்பக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான பிசினஸ் சூழல் இல்லை. அதற்கான நேரத்தை ஆர்பிஐ எங்களுக்கு கொடுக்க மறுக்கிறது" எனச் சொன்னார்கள்.
பொருளாதாரக் காரணிகள்
அதற்கு காரணமாக மின்சாரம் சர்க்கரை மற்றும் உரங்கள் போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களால் கட்டுப்படுத்த இயலாத காரணிகள் காரணமாகத் தான் பிசினஸைச் செய்ய முடியவில்லை எனவும் விளக்கினார்கள்.
என்ன காரணிகள்
உதாரணமாக உலக அளவில் சர்க்கரையின் விலை சரிந்தது, கச்சா எண்ணெய் விலையை, அதிகரிப்பது, எரிபொருள் விலை அதிகரிப்பது, பணப் புழக்கம் குறைவது போன்ற காரணிகளை அடுக்கியது. இந்த காரணிகள் எதையுமே தங்களால் கட்டுப்படுத்த முடியாது. தங்கள் கையில் இல்லை. ஆகையினால் இந்த காரணிகளால் ஏற்படும் நஷ்டங்களை நாங்கள் வேண்டும் என்றே செய்ததாக பழி சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டது.
நாட்கள் குறைவு
குறிப்பாக ஆர்பிஐ பிப்ரவரி 12, 2018 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் வாராக் டன் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க வெறும் 180 நாட்கள் மட்டுமே நேரம் ஒதுக்கியது. இதற்கு முன் இந்த காலக்கெடு 270 நாட்களாக இருந்தது. இந்த நாட்கள் குறைப்பையும் மிகக் கடுமையாக எதிர்த்தது மேலே சொன்ன துறை சார்ந்த நிறுவனங்கள்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கை ஆர் எஃப் நரிமன் மற்றும் வினித் சரண் ஆகியோர் விசாரித்தார்கள். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் "உண்மையாகவே ஆர்பிஐ தனக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மற்றும் பலத்தைத் தாண்டி செயல்பட்டிருக்கிறது. எனவே ஆர்பிஐ பிப்ரவரி 12, 2018 அன்று வெளியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கை செல்லாது" என அறிவித்திருக்கிறார்கள்.
நிம்மதியா..?
இந்தத் தீர்ப்பை அமைப்பு சாராத துறைகளில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகளுக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை குறைத்திருக்கிறது. இந்த ஒரு சுற்றறிக்கையாள் இந்தியா முழுவதும் சுமார் 2.2 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ள வாராக் கடன்களை திருப்பி வசூலிக்க ஆர்பிஐயும் மற்ற வங்கிகளும் கண்காணித்து விசாரித்தும் வந்ததை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளவும்.