நவம்பர் 08, 2016. இந்திய ரூபாய் நோட்டுக்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். அன்று மோடிஜி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாக் காசானது.
பலரும் பிள்ளை குட்டிகளோடு வங்கி வாசலில் தவமிருந்து பணத்தைப் பெற்றார்கள். அப்போது வெளியிடப்பட்டது தான் இந்த புதிய ரோஸ் நிற புதிய 2000 ரூபாய் நோட்டு.
இந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கிட்ட தட்ட ஒரு செலிபிரிட்டி போல உலா வந்து கொண்டிருக்கிறது. காரணம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கிறது. இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சர்ச்சையில் தான் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கி இருக்கின்றன.
2000 ரூபாய் வசதி
பணமதிப்பிழப்புக்கு முன்பு வரை 1,000 ரூபாய் நோட்டுகளாகப் பதுக்கி வந்த மோசடி கும்பல்களுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டு ஒரு தேவதையாகவே தெரிகிறாதாம். இதற்கு சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கிய புதிய 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளே சாட்சி.
தேர்தல் வேலை
தற்போது 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சட்டமன்றத்தில் இருக்கும் காலி இடங்களுக்கு இடைத் தேர்தல்களை எல்லாம் கடந்த மார்ச் 10, 2019-ல் அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகளில் ஊரே களை கட்டிக் கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சிகள்
இந்த தேர்தல் நேரத்தில் தான் புதிய 2000 ரூபாய் நோட்டுகளுக்கு ஒரு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் அளிக்கும் அரசியல் கட்சிகள்தான் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்து விநியோகம் செய்து வருகிறார்கள் என ஒரு செய்தி வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு காரணத்துக்கான ஆர்பிஐ புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதையே ஜனவரி 2019 முதல் நிறுத்தி இருக்கிறதாம்.
பதுக்கல்கள்
சமீபத்தில் எஸ்பிஐ வெளியிட்ட Ecowrap அறிக்கைகள் படி அதிக மதிப்புடைய கரன்ஸிகளில் 78% தான் இந்திய பொருளாதாரத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. அதோடு பொருளாதாரத்துக்கு தேவையான 2000 ரூபாய் நோட்டுக்கள் சரியாக தேவையான அளவில் புழக்கத்துக்கு விடப்படவில்லை எனவும் சொல்லி இருக்கிறது. 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் அதிகம் இல்லாததால் ஏடிஎம்-கள் விரைவில் பணம் இல்லாமல் போய்விடுகிறதாம்.
ஏடிஎம்
தற்போது மக்களுக்குத் தேவையான பணத்தை கொடுக்க புதிய 200 ரூபாய் நோட்டுக்களையும் ஏடிஎம் இயந்திரங்கள் வழி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம். Confederation of ATM Industry (CATMi) என்கிற அமைப்பு "தற்போது ஏடிஎம் இயந்திரங்களில் 2000 நோட்டுக்களைப் பயன்படுத்துவது பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இந்தியாவின் 50% ஏடிஎம்களில் (2.2 லட்சம் ஏடிஎம்களில்) இன்னும் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை கையாள முடியவில்லையாம். அதை சரி செய்து கொண்டிருக்கிறோம்" என்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தேர்தல் முடிந்தால் கொஞ்சம் நிலைமை சீரடையும் எனவும் வங்கி அதிகாரிகள் சொல்லி வருகிறார்களாம்.