சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய பண்ணை பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் அக்ரோ உற்பத்தியை விரிவு படுத்துவதற்காக புதிதாக பசும் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பொது மக்களிடத்தில் பசும்பாலுக்கு இருக்கும் அதீத வரவேற்பை அடுத்து இந்த புதிய பசும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஹட்சன் அக்ரோ நிறுவனம் ஏற்கனவே மூன்று விதமான பாக்கெட்களில் பாலை அடைத்து வீடுகளுக்கு சப்ளை செய்துவருகிறது. தற்போது நான்காவதாக பசும்பாலையும் உற்பத்தி செய்து சப்ளை செய்ய முடிவெடுத்துள்ளது.
பசும் பாலுக்கு தாய்மார்களிடம் இருக்கும் அதீத வரவேற்பை அடுத்து இந்த புதிய ஹட்சன் பசும் பாலையும் (Hatsun Cow Milk) பாக்கெட்டுகளில் அடைத்து வீடுகளுக்கு சப்ளை செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
அருண் ஐஸ் க்ரீம்
ஹட்சன் என்பதற்கு அர்த்தம் ஹாட் சன் (Hot Sun), அதாவது சூடான சூரியன் என்பது தான் அர்த்தம். ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம். கடந்த 1970ஆம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட பண்ணை பால் உற்பத்தி நிறுவனமாகும். முதன்முதலில் அருண் ஐஸ் க்ரீம் என்ற பெயரில் ஐஸ் க்ரீம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தது.
ஹட்சன் வியாபாரம்
கடந்த 1998ஆம் ஆண்டு முதல் புதிதாக ஆரோக்யா பால் மற்றும் ஹட்சன் பால் என்ற பெயரிலும் பால் வங்கிகளின் மூலம் பாலை சேகரித்து பதப்படுத்தி தினந்தோறும் வீடுகளுக்கு சப்ளை செய்து வருகின்றது. இதன் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய். தன்னுடைய வருவாயில் கிட்டத்தட்ட 65 சதவிகித்தை ஆரோக்யா பால் வழங்குகிறது.
பால் வங்கிகள்
ஹட்சன் அக்ரோ நிறுவனம் ஆசியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பால் பண்ணை நிறுவனம் என்ற விருதினை பெற்ற நிறுவனமும் கூட. தென் இந்தியா முழுவதும் 5249 பால் வங்கிகளை அமைத்து சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பாலை சேகரித்து தன்னுடைய பண்ணை மூலம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்துவருகிறது.
ஹட்சன் பசும்பால்
பொது மக்களிடத்தில் பசும் பாலுக்கு இருக்கும் அதீத வரவேற்பை அடுத்து ஹட்சன் நிறுவனம் புதிதாக ஹட்சன் பசும் பாலை அறிமுகம் செய்துள்ளது.
பொது மக்கள் வரவேற்பு
எங்களின் வெற்றியே பாலை அதன் இயல்பு தன்மை மாறாமல் பதப்படுத்தி அப்படியே வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது தான். பசும் பாலுக்கான தேவை மக்களிடையே அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கெட்டுப்போகாது
பண்ணைகளில் வளர்க்கப்படும் பசு மாடுகளின் பாலை தனியாக சேகரித்து அவற்றை குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதிக்க வைத்து அதை குளிர்விப்பதன் மூலம் அதில் உள்ள பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பதப்படுத்துவதன் மூலம் பால் மேலும் தரம் மிக்கதாகிறது. எளிதில் கெட்டுப்போவது தவிர்க்கப்படுகிறது.
ரூ.25 மட்டும் தான்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பசும் பால் 500 மி.லி. பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.25 ஆகும். முதல் கட்டமாக சென்னை, வேலூர், திருச்சி, சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும். பின்னர் படிப்படியாக பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் பிரசன்ன வெங்கடேஷ் கூறினார்.