மும்பை: இரண்டாவது முறையாக மத்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ ரேட் (Repo Rate) வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி தனக்கு கீழ் இருக்கும் வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் தொகைக்கு வசூலிக்கும் வட்டியின் பெயர் தான் இந்த ரெப்போ ரேட்.
தற்போது ரெப்போ ரேட்டை 6.25 சதவிகிதத்தில் இருந்து 0.25 % அல்லது 25 அடிப்படைப் புள்ளிகளக் குறைத்து 6.00 சதவிகிதமாக்கி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 2019-ல் தான் 6.5 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட்டில் 0.25 சதவிகிதத்தைக் குறைத்து 6.25 சதவிகிதத்துக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உர்ஜித் படேலின் ராஜினாமாவுக்குப் பின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பின் தான் இந்தியாவில் வட்டி விகிதங்கள் குறைக்கத் தொடங்கியது ஆர்பிஐ.
பெரும்பான்மை வாக்கு
மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவுக் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் 6 பேரில் நான்கு பேர் வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லியும், 2 பேர் வட்டி விகிதத்தை குறைக்கக் கூடாது எனச் சொல்லி வாக்களித்தார்களாம்.
கணிப்பு
ப்ளூம்பெர்க் என்கிற நிறுவனம் 43 பொருளாதார வல்லுநர்களிடம் இந்தியா தன் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா..? குறைக்காதா என்கிற கேள்வியை முன் வைத்தது. அதில் 41 வல்லுநர்கள் இந்தியா தன் ரெப்போ ரேட்டை குறைத்துக் கொள்ளும் எனச் சொல்லி இருந்தார்களாம். அதில் பல வல்லுநர்கள் 25 அடிப்படைப் புள்ளிகளைக் குறைக்கும் எனச் சொல்லி இருந்தார்களாம்.
என்ன காரணங்கள்
பொருளாதார வல்லுநர்கள் இந்தியா ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைக்க சில பொருளாதார அழுத்தங்களைக் குறிப்பிடுகிறார்கள். அதில் இரண்டு விஷயங்களை அடிக் கோடிட்டுக் காட்டுகிறார்கள். 1. இந்தியாவின் பொருளாதா வளர்ச்சி தேங்கி நிற்பது 2. இந்தியாவில் பணவீக்கம் மிகக் குறைவாக இருப்பது. இந்த இரண்டுமே இந்தியா போன்ற பெரிய வளரும் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள்.
வட்டியைக் குறைக்க வில்லை
கடந்த பிப்ரவரி 2019-ல் ஆர்பிஐ தன் ரெப்போ ரேட் வட்டியைக் குறைத்துக் கொண்ட போதிலும், வங்கிகள் முழுமையாக அந்த வட்டி இறக்கத்தை கடன் வாங்குபவர்களுக்கு கொடுக்கவில்லை. எல்லா வங்கிகளும் 0.05 - 0.10 சதவிகிதம் வரையான வட்டிக் குறைப்பை மட்டுமே கொடுத்தார்கள் எனவும் அனலிஸ்டுகள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக இந்த முறையாவது ஆர்பிஐ குறைத்திருக்கும் வட்டி விகிதத்தை மக்களுக்கு நேரடியாக தற்போது இருக்கும் கடன் வட்டிகளில் குறைத்துக் கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வருகிறார்கள்.
டெபாசிட்டுகளுக்கு போட்டி
கடன் வட்டி விகிதங்களைக் குறைக்காதது ஒரு பிரச்னை என்றால், கடன் கொடுக்க தேவையான பணமே பெரிய அளவில் மக்களிடம் இருந்து டெபாசிட்டாகத் தான் வருகிறது. ஆக இப்போது டெபாசிட்டுகளும் குறைந்து வருகிறதாம். எனவே டெபாசிட்டுகளைக் கவர வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சிகரமான வட்டி வருமானங்களை கொடுக்க முயற்சிப்பதாக சில வங்கி அதிகாரிகள் சொல்கிறார்களாம்.
உணவுப் பிரச்னை & பணவீக்கம்
பொருளாதார வல்லுநர்கள் ஒரு பக்கம் இந்திய பொருளாதாரத்தை எடை போட்டுக் கொண்டிருக்கும் போது ஆர்பிஐ-யும் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி சில எச்சரிக்கை கணிப்புகளை வெளிப்படுத்தி இருக்கிறது. அதில் உலக அளவில் இந்தியாவுக்கு தேவையான உனவுத் தேவை மற்ரும் சப்ளை இந்தியாவும் சாதகமாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. குறுகிய காலத்துக்கு (அடுத்த சில மாதங்களுக்கு) உணவுப் பணவீக்கம் கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கும் எனவும் கணித்திருக்கிறது ஆர்பிஐ.
சரியாகிவிடும்
பிப்ரவரி 2019-ன் கணக்குப் படி இந்தியாவின் உணவுப் பணவீக்கம் 2.57% ஆக இருக்கிறது. டிசம்பர் 2018-க்குள் இந்தியாவின் உனவுப் பணவீக்கம் 3.9% அளவுக்கு அதிகரித்து இந்தியப் பொருளாதாரம் சீரடையும் எனக் கணித்திருந்தது ஆர்பிஐ. ஆனால் இப்போது வரை பணவீக்கம் 3% கூட தொடவில்லை என்பதையும் சொல்கிறது. இந்த பிரச்னை எல் நினோவால் ஏற்படும் குறைவான மழைப் பொழிவு மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் பிரச்னைகளில் கூடிய விரைவில் உணவுப் பணவீக்கம் சரியாகிவிடும் எனவும் சொல்லி இருக்கிறது. கச்சா எண்ணெய் கடந்த பிப்ரவரி 2019-ல் இருந்து இன்றைக்கு வரை சுமார் 10% வரை விலை கூடி வர்த்தகமாகி வருவது கவனிக்கத்தக்கது.
ஜிடிபி கவலை
அதோடு கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% மட்டுமே ஜிடிபி வளர்ச்சி கண்டிருப்பதையும் வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறது. செப்டம்பர் 2017 காலாண்டு தொடங்கி டிசம்பர் 2018 வரையான ஐந்து காலாண்டுகளில் இந்த டிசம்பர் 2018 காலாண்டு தான் மிகக் குறைவான ஜிடிபி வளர்ச்சி என்கிற பதற்றத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது.