பெங்களூரு: தொழிலதிபரிடம் ரூ. 14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
பெங்களூரு: வழக்கில் இருந்து விடுவிக்க தொழில் அதிபரிடம் ரூ.14 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி உள்பட 2 பேரை பெங்களூருவில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
பெங்களூரு ஜெயநகர் ஏரியாவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.
வருமான வரித்துறை அதிகாரிக்கு துணையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். ரூ.14 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
வருமான வரி சோதனை
பெங்களூருவை சேர்ந்தவர் சீனிவாஸ். தொழில் அதிபர். இவர் வருமானத்திற்கு அதிகமா சொத்து சேர்த்ததாக வந்த தகவலை அடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனிவாஸனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு சோதனை நடத்தியது.
வருமானத்திற்கு கூடுதலான சொத்து
வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் தொழிலதிபர் சீனிவாஸ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சீனிவாஸ் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருமாறு அழைத்திருந்தனர்.
ரூ.14 லட்சம் கொடுத்தால் மேட்டர் ஓவர்
தொழிலதிபர் சீனிவாஸை வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க சீனிவாஸிடம் வருமான வரித்துறை அதிகாரியான நாகேஷ் ரூ.14 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு நாகேசும் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை சீனிவாஸ் தனது உதவியாளர் ஒருவரிடம் ரூ.14 லட்சம் லஞ்சத்தை கொடுத்து அனுப்பினார்.
பொறிவைத்து காத்திருந்த சிபிஐ
முன்னதாக தொழிலதிபர் சீனிவாஸ் வருமான வரித்துறை அதிகாரி நாகேஷூக்கு லஞ்சம் கொடுக்கப்போகும் விஷயம் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி நாகேஷையும் கையும் களவுமாக பிடிக்க பொறிவைத்து காத்திருந்தனர்.
நாகேஷ் சுற்றி வளைப்பு
சீனிவாஸ் தனது உதவியாளரிடம் கொடுத்தனுப்பிய ரூ.14 லட்சம் ரொக்கப் பணத்தை பெங்களூரு ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து நாகேசும் அவருடன் வந்த மற்றொரு வருமான வரித்துறை அதிகாரியும் பெற்று கொண்டனர் இதற்காகவே காத்துக்கொண்டு இருந்த சிபிஐ அதிகாரிகள் நாகேஷையும் உடன் வந்த மற்றொரு வருமான வரித்துறை அதிகாரியையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
ரூ.1.35 கோடி ரொக்கம்
சிபிஐ அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரியான நாகேசையும், அவருடன் வந்த மற்றொருவரையும் உடனடியாக கைது செய்தனர். அதோடு அவர்கள் வைத்திருந்த ரூ.14 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட போது அவர்கள் வைத்திருந்த மேலும் ரூ.1.35 கோடி ரொக்கப்பணமும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான முறைகேடான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
கைது செய்யப்பட்ட வருமான வரி அதிகாரி நாகேஷ் மற்றும் இன்னொரு அதிகாரியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வருமான வரித்துறை அதிகாரிகள் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.