டெல்லி: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் 20 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 72 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளது. இதற்கு 3.60 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். பணம் ஒதுக்கீடு செய்ய நாடு 9 முதல் 10 சதவீதம் வளர்ச்சி காண வேண்டும். நாடு தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது என்று நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கந்த் கூறியுள்ளார்.
வாராக்கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், ரிசர்வ் வங்கியும், அரசும் வாராக்கடன் பிரச்சினையை தீவிரமாக ஆய்வு செய்து புதிய சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
வாராக்கடன் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 2,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடனுக்கு நிறுவனங்கள் தவணையை செலுத்த ஒரு நாள் தவறினாலும் வங்கிகள் 180 நாட்களுக்குள் அக்கடனை மறுசீரமைக்க வேண்டும் தவறினால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம் திவால் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் புதிய விதிமுறை 25 கோடி ரூபாய் வரை கடன் நிலுவையில் உள்ள குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
வாராக்கடன் வசூல் அதிகரிப்பு
இதனால் வாராக் கடன் வசூல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் திவால் நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்தி வருகின்றன. வங்கிகளின் வாராக் கடன் வசூலும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மின் துறையைச் சேர்ந்த 34 நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்நிறுவனங்கள் வங்கிகளுக்கு 2.30 லட்சம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் தொழில் புரிவதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை இது
மீறுவதாக உள்ளது எனக் கூறி ரிசர்வ் வங்கியின் உத்தரவை ரத்து செய்தார். வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 70 நிறுவனங்களிடம் இருந்து மட்டும் 3.80 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவால் இத்தொகையை எப்படி வசூலிப்பது என தெரியாமல் வங்கிகள் விழிக்கின்றன.
அமிதாப் கந்த் கருத்து
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் துறையின் ஒழுக்கம் சீர்குலைந்து விடும் என சட்ட வல்லுனர்களும், தொழில் துறையினரும் கவலை தெரிவித்து உள்ளனர். இது குறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கருத்து கூறியுள்ளார். அப்போது நிதிச் சந்தையில் ஒழுக்கத்தை ஏற்படுத்தி சிறந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏராளமான பணிகளை மேற்கொண்டன.
வாராக்கடன் வசூலிக்க புதிய விதிமுறை
நிதிச் சந்தையில் பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அந்த நடவடிக்கைகள் அமைந்தன. குறித்த காலத்தில் கடனை திரும்ப வசூலிப்பதும் இடர்ப்பாட்டு கடன்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும். இந்நிலையில், வாராக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசும் ரிசர்வ்
வங்கியும் இணைந்து புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
நாடு வளர்ச்சி 10 சதவிகிதம்
நாடு தற்போது, 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 20 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளது. இதற்கு 3.60 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு ஒதுக்கீடு செய்ய நாடு 9-10 சதவீதம் வளர்ச்சி காண வேண்டும். வளர்ச்சி இல்லாமல் எதையும் செய்ய முடியாது வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது. மானியங்களால் விவசாயம் செழிக்காது. சந்தைப் பங்களிப்பை அதிகரித்தால் தான் விவசாயிகள் வளம் பெறுவர் என்றும் அமிதாப் கந்த் கூறியுள்ளார்.