நாமக்கல்: 2019 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் 70 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் உண்மையைல் இதன் பின்னும் இன்னும் சில சைபர்களை சேர்த்துத் தான் ஒவ்வொரு பெரிய கட்சி வேட்பாளர்களும் செலவழிக்கிறார்கள்.
எதார்த்தத்திலும் செலவு செய்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அனைத்து வேட்பாளர்கள், மக்கள் மற்றும் தேர்தல் ஆணையம் உட்பட அனனைவருக்குமே புரிகிறது. காசு இருக்கும் பிசினஸ் மேன்கள், மருத்துவர், ஆடிட்டர், வக்கீல் போன்ற ப்ரொஃபசனல்கள், பரம்பரை பரம்பரையாக அரசியல் கட்சிகள் இருப்பவர்களூக்கு பணம் ஒரு பெரிய விஷயமாக இல்லை.
ஆனால் ஒரு சாதாரண குடும்ப பின்னனியில் இருந்து வருபவர்களுக்கு, சுயேட்சைகளாக நிற்கும் நல்ல மனிதர்களுக்கு இந்த 70 லட்சம் ரூபாயே ஒரு மிகப் பெரிய இமாலயத் தொகையாகத் தான் இருக்கிறது. இப்போது அப்படிப்பட்ட ஒருவர் தேர்தல் செலவுகளுக்கான வங்கிகளிடம்கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.
காந்தி வேஷம்
இதில் வருத்தமான விஷயம் என்ன வென்றால் ரூபாய் நோட்டுக்களில் சிரிக்கும் காந்தியைப் போல வேடமிட்டு, காந்தி நோட்டைக் கேட்டிருக்கிறார் மனிதர். தமிழகத்தின் முட்டை நகரமான நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 'அகிம்சை சோஷியலிஸ்ட் கட்சி' -ன் சார்பாக வேட்பாளராக நிற்கிறார் ரமேஷ். இவர், தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள தன்னிடம் பணம் இல்லை. எனவே தற்போதைக்கு ஒரு 50 லட்சம் ரூபாயை கடனாகக் கொடுத்து உதவினால் வசதியாக இருக்கும் என சில அரசு வங்கிகளிலில் விண்ணப்பித்திருக்கிறாராம்.
அதே கெட் அப்
அதுவும் தேசப் பிதா மகாத்மா காந்தியைப் போலவே அரை நிர்வான ஆடை, கண்ணாடி, கையில் தடி என முழு கெட்டப்பாக வந்து வங்கிகளில் விண்ணப்பித்ததில் வங்கி அதிகாரிகள் எல்லாம் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்களாம். இவர் காந்தியக் கொள்கை வழியில் நடப்பவராம். நாமக்கள் பகுதிகளில் யோகா ஆசிரியராகவும், விவசாயத்தையும் முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறாராம்.
செலவு செய்தால் வெற்றி
மக்களை சந்திக்கத் தேவையான போக்குவரத்து பனம்., விளம்பரங்கள், பிரசார செலவுகள்... என ஒரு வேட்பாளருக்கு தேவையான செலவுகளை செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு என நம்புகிறாராம். இன்னும் தமிழகத்தில் 13 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி 50 லட்சம் ரூபாய் கேட்டு வங்கிகளில் விண்ணப்பிப்பதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்களாம்.
இதெல்லாம் அடமானம்
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நாமக்கல் தொகுதியில் ரமேஷ் வெற்றி பெற்றவுடன், மாதாமாதம் மக்களவை உறுப்பினராக மத்திய அரசில் இருந்து வரும் சம்பளப் பணத்தை வைத்து கடனை செம்மையாக திரும்பச் செலுத்திவிடுவேன். தயவு செய்து கடன் தாருங்கள் என தன் கடன் விண்ணப்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம். இதற்காக, மத்திய அரசு அளித்துள்ள ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை எல்லாம் வங்கியில் மொத்தமாக ஒப்படைத்துள்ளார் என்பது மேலும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
வங்கி அதிகாரிகள் பதில்
இப்படிப்பட்ட கடன் விண்ணப்பத்தை படித்த அதிகாரிகள், இப்போதே மறுக்காமல் பரிசீலிப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம். ஆனால் இந்த விண்ணப்பத்தை என்ன செய்வது என கொஞ்சம் தீவிரமாகவே ஆலோசித்தும் வருகிறார்களாம். தேர்தல் நேரம் நெருங்குவதால் உடனடியாக கடன் கொடுக்கும் படி ரமேஷ் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம். இந்திய தொலைக் காட்சியில் முதல் முறையாக ஒரு அரசியல்வாதி தேர்தல் செலவுக்கு கடன் கேட்டு வங்கியில் விண்னப்பிக்கிறார்.