டெல்லி: ஆக்ஸிஸ் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அமிதாப் சவுத்ரி பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே வங்கியில் இடைநிலையில் பணியாற்றும் 50 நிர்வாக மேலாளர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பணி நீக்கம் செய்யப்படும் 50 ஊழியர்களுக்கு வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படப்போவதில்லை என்றும் நிர்வாக வசதிக்காகவே பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்படுவதற்கு காரணம் அவர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டியதால் தானே தவிர வேண்டுமென்றே ஊழியர்களை குறைக்கவேண்டும் என்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தலைமை செயல் அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அமிதாப் சவுத்ரி
ஆக்ஸிஸ் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சவுத்ரி கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற கையோடு வங்கியின் செயல்பாடுகளை கவனித்த அவர் வங்கியின் செயல்பாடுகளை அதிகரிக்க தேவையான புதிய உத்திகளை செயல்படுத்த முடிவெடுத்தார்.
நிர்வாக மேலாளர்கள்
வங்கியின் செயல்பாடுகளை அதிகரிக்கும் நடவடிக்கையின் முதல் படியாக இடைநிலை மட்டத்தில் உள்ள திறமை குறைவான நிர்வாக மேலாளர்களை பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்தார். பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளில் நீண்ட காலமாக பணியில் உள்ளவர்கள்.
விரைவில் ஓய்வு
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படமாட்டார்கள். பணி நீக்கம் செய்யப்படும் தகவலை அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததோடு அவர்களை வேறு புதிய வேலைக்கு முயற்சிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் விரைவில் ஓய்வுபெறும் வயதை எட்டும் நிலையில் உள்ளவர்கள் என்றம் அமிதாப் சவுத்ரி கூறினார்.
செலவுகளை குறைக்க எண்ணமில்லை
இடைநிலையில் உள்ள நிர்வாக மேலாளர்களை பணி நீக்கம் செய்வதால், பணியில் உள்ள மற்றவர்கள் தங்கள் பணித் திறமையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். மேலும், நிர்வாக செலவுகளை குறைக்கும் விதமாகவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
மூத்த பணியாளர்கள் தான்
50 ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து விளக்கிய அமிதாப் சவுத்ரி, பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் விரைவில் ஓய்வு பெறும் வயதை எட்டும் கட்டத்தில் உள்ள மூத்த பணியாளர்கள் என்றும் மற்றபடி வேன்டுமென்றே ஊழியர்களை குறைக்கும் எந்த திட்டமும் எங்களுக்கு கிடையாது என்று தெரிவித்தார்.
சிலர் உள்ளே, சிலர் வெளியே
புதிய தலைமை செயல் அதிகாரி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை பலருக்கு அதிருப்தி அளிப்பதாக உள்ளது. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது குறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், புதிய தலைமை செயல் அதிகாரியின் வருகை சில பணியாளர்களுக்கு வெளியேறும் சூழலை உண்டாக்கி உள்ளது. இதை உணர்ந்த சிலர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். சிலர் வெளியேறுவது பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டனர் என்று விரக்தியாக பதிலளித்தார்.