டெல்லி: மக்களும் அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கை இல்லை இல்லை பாஜகவின் சத்தியப் பத்திரத்தை நேற்று வெளியிட்டார்கள்.
உடனடியாக காங்கிரஸ் தேர்தல் பாஜகவின் சத்தியப் பத்திரத்தை விமர்சிக்கத் தொடங்கிவிட்டது. காங்கிரஸோடு, ஆம் ஆத்மி, மமதா பேனர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகள் சரமாரியாக விமர்சித்திருக்கிறார்கள்.
இந்த கட்சிகள் என்ன மாதிரியான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். மோடி மீதும், பாஜகவின் சத்தியப் பத்திரத்தின் மீதும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் விமர்சனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ரந்தீப் சுஜிவாலா
நாட்டின் முக்கிய பிரச்னையான வேலைவாய்ப்பு கொடுப்பது பற்றியோ உருவாக்குவது பற்றியோ பாஜகவின் சத்தியப் பிரமாணங்களில் ஒன்றும் இல்லையே..! பாஜக ஒரு நாடு ஒருவரி எனச் சொன்னார்கள் ஆனால் அதை 900 முறைக்கு மேல் மாற்றிவிட்டார்கள். இத்தனை முறை மாற்றம் செய்தும் இதுவரை ஒழுங்காக வரி வருவாய்கள் வரவில்லையே என கொந்தளித்திருக்கிறார் ரந்தீப்.
ஒரு கோடி குறைவு
ஒரு கோடி ரூபாய் வரி வசூல் குறைவு எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதோடு இவர்கள் ஆட்சிக் காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் டேக்ஸினால் சுமார் 70% ஸ்டார்ட் அப்கள் பல பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என பொரித்தெடுத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜேவாலா.
பத்திரிகையாளர் சந்திப்பு
பாஜக சொன்னது எல்லாம் மக்களுக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு தனி நபருக்கு 15 லட்சம் கொடுப்பேன்,2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், பெண்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவேன் என சொன்னதில் எந்த ஒரு விஷயத்தையும் செய்து காட்டவில்லை. பாஜகவை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் எனச் சொன்னது காங்கிரஸ்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் இதுவரை லோக்பாலை அமைக்கவில்லை. வெளிப்படைத் தன்மை இன்றி இயங்கி வருகிறார்கள். 14.5 லட்சம் ஆர்டிஐ மனுக்கள் நிலுவையில் மட்டும் இருக்கிறது. 2018-ம் ஆண்டில் வந்த ஆர்டிஐ மனுக்களில் 40%-த்தை தள்ளுபடி செய்துவிட்டார்கள்.
அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லியை ஆளும் ஆம் ஆத்மியின் தலைவர் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் "2014-ல் சொன்ன பொய்கள் என்ன ஆனது எனச் சொல்லாமலேயே, பாஜக 2019 தேர்தலுக்கு புதிய பொய்களைச் சொல்லி இருக்கிறார்கள். மோடியோ அமிஷ் ஷாவோ பணமதிப்பிழப்பை ஏன் செய்தார்கள் எனப் பேச தைரியமற்றவர்கள் என காரசாரமாகப் பேசி இருக்கிறார்.