டெல்லி: சர்ச்சைப் புகழ் சுப்பிரமணியம் சுவாமி ஐஐடி டெல்லியுடனான சம்பள மோதலில் வெற்றி பெற்று 1972 முதல் 1991 வரையான காலத்துக்கான சம்பளத்தைப் பெற போகிறார். இதற்கான நீதிமன்ற உத்தரவு நேற்று வெளியாகி இருக்கிறது.
இந்த 1972 - 1991 வரையான காலங்களில் கொடுக்க வேண்டிய சம்பளத்துக்கு 8% வட்டியோடு கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் சொல்லி இருக்கிறதாம். எனவே தன் சம்பள பாக்கி + அதற்கான வட்டியோடு 40 - 45 லட்சம் ரூபாய் வரைப் பெறப் போகிறார்களாம்.
ஐஐடி டெல்லியின் இயக்குநர் ராமகோபால் ராவ் இந்த விஷயத்தை தங்களின் ஆளுநர்கள் குழுவுக்கு அனுப்பப் போகிறார்களாம். அந்தக் குழுவின் வழிகாட்டுதல் படி தான் அனைத்து நடைமுறைகளையும் செய்யப் போகிறார்களாம்.
சுப்பிரமணியம் சுவாமி
இந்த வழக்கில் வெற்றி பெற்றதைக் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. "47 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி நீதிமன்றத்தில் ஐஐடி டெல்லி என்னோடு தோற்று இருக்கிறது. இப்போது என் சம்பளத்தை 8% கூட்டு வட்டியோடு கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். முதலில் ஐஐடி எனக்கான பேராசிரியர் பதவியை திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த சம்பவம் கல்வித் துறையில் ஊழல் செய்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.
ஐஐடி டெல்லி
சுப்பிரமணியம் சுவாமி அரசியலில் முழு நேரமாக வருவதற்கு முன் டெல்லி ஐஐடியில் பொருளாதார பேராசிரியராக 1969 முதல் 1972 வரை பணியாற்றினார். அப்போது நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் ஐஐடி டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1991-ம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் ஐஐடி டெல்லியில் பணியில் சேரலாம் எனச் சொன்னது.
சம்பளம் எங்கே..?
சுப்பிரமணியம் சுவாமி தன்னை அரசியல் ரீதியாக வெளியேற்றியதாகவும், அதற்கு சம்பள பாக்கிகளைக் கொடுக்கும் படியும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தன் சம்பள பாக்கிகளுக்கு 18% வட்டியோடு கொடுக்க வேண்டும் எனவும் முறையிட்டார். ஆனால் தற்போது நீதிமன்றம் 8% வட்டியில் சம்பள பாக்கிகளைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறது.
எதிர் வாதம்
வழக்கு நடந்து கொண்டிருந்த போது ஐஐடி டெல்லி தரப்பில் வாதிட்டவர்கள் "சுப்பிரமணியம் சுவாமி சம்பாதிக்கும் வருமானங்கள் குறித்து எந்த விஷயத்தையும் ஐஐடியிடம் தெரிவிக்கவில்லை. அதோடு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து பேராசிரியராக பணி புரிந்து வந்தார்" என பல காரணங்களைச் சொல்லி சுப்பிரமணியம் சுவாமி-க்கு சம்பளம் கொடுக்கக் கூடாது என வாதிட்டது.
மனித வள மேம்பாட்டுத் துறை
ஒரு கட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமே ஐஐடி டெல்லி அமைப்பிடம் பேசியது. சுப்பிரமணியம் சுவாமி-க்கு நீதிமன்றம் இல்லாமல் வெளியே வைத்து ஒரு சாமாதானம் பேசலாம் கேட்கும் தொகையை அட்ஜெஸ்ட் செய்து கொடுக்கலாம் எனச் சொன்னது. ஆனால் ஐஐடி ஒப்புக் கொள்ளவில்லையாம்.