டெல்லி: இந்தியாவின் எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கு அடுத்த மே மாதத்துக்கு தேவையான கச்சா எண்ணெய்களை வழக்கம் போல ஈரானிடம் இருந்து வாங்க, ஆர்டர் கொடுக்காமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த நவம்பர் 2018-ல் அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. அதன் பின் நவம்பர் தொடங்கி ஆறு மாதங்கள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கலாம் என பொருளாதாரத் தடையை எட்டு நாடுகளுக்கு மட்டும் தளர்த்தியது.
இந்தியா உட்பட எட்டு நாடுகளுக்கு மட்டுமே இந்தத் தடை விலக்கு தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி தான் ஈரானிடம் கடந்த ஆறு மாதங்களாக இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது.
மாதக் கணக்கு
ஒரு மாதத்தில் ஈரானிடம் இருந்து சுமார் 9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது இந்தியா. ஈரானிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்குவதிலேயே இந்தியா தான் இரண்டாவது பெரிய நாடு. முதலிடம் சீனாவுக்கு.
பதில் தேவை
அடுத்த 7 - 10 நாட்களுக்குள் அமெரிக்காவிடம் இருந்து செய்தி வரும் என இந்திய அதிகாரிகளும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்களாம். மேலும் ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியாவை அனுமதிப்பார்கள் என உறுதி செய்ய முடியவில்லை எனவும் அதிகாரிகள் வட்டத்தில் பேசி வருகிறார்களாம்.
இந்திய தரப்பு
ஆனால் இந்தியாவுக்கு தொடர்ந்து ஈரான் உடன் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என ஆசை இருக்கிறதாம். ஏற்கனவே கடந்த நவம்பர் 2018-ல் இருந்து இந்தியாவின் அரசு எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் மட்டுமே ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தரப்பு
அமெரிக்க தரப்போ ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கவிடக் கூடாது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வந்து பொருளாதார வலியைக் காட்ட வேண்டும் என பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு நாட்டைப் பாருங்கள்
அதோடு நவம்பர் 2018-ல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதி கொடுத்த 8 நாடுகளில் 3 நாடுகள் இனி ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை எனச் சொல்லி இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஆக இந்தியாவும் அதே போல வேறு யாராவது நல்ல எண்ணெய் வியாபாரியைப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா.