டெல்லி: மதுரை ரயில் நிலையத்திற்குள் நுழைந்தாலே விமான நிலையத்திற்குள் நுழைந்தது போன்ற ஒரு நினைப்பை ஏற்படுத்துகிறது. பயணிகள் காத்திருக்கும் அறைகளை 5 நட்சத்திர ஹோட்டல்களைப் போன்று தரம் உயர்த்தி உள்ளது. ரயிலில் பயணிக்கும் கட்டணத்தை விட ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அறையில் தங்குவதற்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இந்தியாவிலேயே 2வது அழகிய ரயில் நிலையம் என 2 மாதங்களுக்கு முன்பு மதுரை ரயில் நிலையத்துக்கு ரயில்வே அமைச்சகம் விருது வழங்கியது. மதுரை ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில்வே வாரியம் 10 கோடி நிதி ஒதுக்கியது. நடைபாதை, பேருந்து நிறுத்தத்தின் நீளம் அதிகரிப்பு, மின் தூக்கி அமைப்பது, நடைபாதைகளை இணைக்கும் வகையில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையம் போல மதுரை ரயில் நிலையத்தின் முன்பாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையைப் பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தை ஆர்எம்டி ஹோட்டல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
சர்வதேச தரத்தில் மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையப் பயணிகள் காத்திருப்பு அறையில் வைஃபை, தொலைக்காட்சி, குளிர்பானங்கள், செய்தித் தாள், புத்தகங்கள், ஷூ பாலிஷ், பைகள் வைக்க அலமாரிகள் போன்றவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலைய ஓய்வு அறையைப் பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தை ஆர்எம்டி ஹோட்டல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. காத்திருக்கும் அறையில் தங்க கட்டணத்தை கேட்டால் தலை சுற்றுகிறது.
பயணிகள் காத்திருக்கும் அறை
டார்மண்ட்ரி அறையில் 3 மணி நேரம் தங்க 300 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 500 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 750 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் என கட்டணம் நிர்ணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருக்கும் அறையில் காலை, மாலை, இரவு என மூன்று வேலைக்கும் உணவு, டீ, காஃபி போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது. லாண்ட்ரி சேவை, மருத்துவர்கள் உதவி போன்றவையும் புதிய பயணிகள் ஓய்வு அறையில் கிடைக்கும்.
ஏசி டீலக்ஸ் ரூமிற்கு எவ்வளவு
ஏசி டீலக்ஸ் ரூமில் 3 மணி நேரம் தங்க 650 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 900 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 1,500 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண நிர்ணயம்
சூட் அறையில் 3 மணி நேரத்திற்கு தங்குவதற்கு 1,000 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 1,300 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 2000 ரூபாயும், 24 மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் என கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
காத்திருப்பு அறைக்கு கட்டணம்
பயணிகள் காத்திருப்பு அறையில் பயணிகள் நேரத்தைக் கழிக்க விரும்பும் போது முதல் இரண்டு மணி நேரத்திற்கு 150 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கூடுதல் 1 மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் என நிர்ணைக்கப்பட்டுள்ளது.
குளிக்க விரும்பினால் கட்டணம்
குளிக்க விரும்பும் பயணிகளுக்கு பாத் டவல், ஹாண்ட் டவல், பாடி லோஷன், ஷேவிங் கிட், ஷாம்பு போன்றவையும் வழங்கப்படும். ஆனால் இதற்குக் கூடுதலாக 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பிரிண்ட் அவுட் எடுக்க ஸ்கேன் செய்ய கட்டணம்
சோஃபா வேண்டும் என்றால் முதல் இரண்டு மணி நேரத்திற்கு 250 ரூபாய் கட்டணம். கணினி பயன்படுத்த 50 ரூபாயும், இணையம் பயன்படுத்தக் கூடுதலாக 20 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். பிரிண்ட் செய்ய வேண்டும் என்றால் ஒரு பக்கத்திற்கு 10 ரூபாயும், நகல் எடுக்க ஒரு பக்கத்திற்கு 5 ரூபாயும், ஸ்கேன் செய்ய ஒரு பக்கத்திற்கு 10 ரூபாயும் கட்டணம் என நிர்ணைக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையம் ஸ்மார்ட்
அகமதாபாத் மற்றும் டெல்லி ரயில் நிலையங்களை முழுமையாகச் சர்வதேச தரத்தில் மாற்றிய இந்திய ரயில்வே அடுத்த கட்டமாக மதுரை ரயில் நிலைய பயணிகள் காத்திருப்பு அறையைப் புதுப்பித்துள்ளது. மதுரை ஸ்மார்ட் சிட்டியாக மாறும் முன்பாக மதுரை ரயில் நிலையம் ஸ்மார்ட் ஆக மாறியுள்ளது. சாமான்ய மக்கள்தான் இந்த வசதியை அனுபவிக்க முடியாது என்பது வேதனை.