தற்போது ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் சில எரிபொருட்கள் மற்றும் மது பானங்கள் வரவில்லை. மற்ற படி பெரும்பாலான பொருட்கள் ஜிஎஸ்டி வரி முறையின் கீழேயே வியாபாரம் ஆகி வருகிறது.
தற்போது அடுத்த சில தினங்களில் தேர்தலை வைத்துக் கொண்டு விமான எரிபொருள் ஜிஎஸ்டி வரி முறைக்கும் வர வேண்டும், வரும் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு.
இந்திய பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனங்கள் மிகப் பெரிய நிதி நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அரசின் ஏர் இந்தியா தொடங்கி தனியார் துறையில் பெரிதாக வளர்ந்த நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரை அனைத்து விமான சேவை நிறுவனங்களும் நஷ்டத்தை தவிர்க்கும் அளவுக்கு கூட வருவாய் ஈட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய செலவு
பொதுவாகவே விமான சேவை நிறுவனத்தின் மிகப் பெரிய செலவு என்றால் அது விமான எரிபொருளுக்கு செய்யும் செலவுகள் தான். ஒரு ட்ரிப்பில் கிடைக்கும் வருவாயில் குறைந்தபட்சமாக சுமார் 50 - 60 சதவிகித வருவாய் அப்படியே விமான எரிபொருளுக்கு செலவழிக்க வேண்டி இருக்கிறதாம்.
விலை குறைப்பு
இப்போது திடீரென விமானங்களில் பயன்படுத்தப்படும் ATF - Air Turbine Fuel விமான எரிபொருளின் விலையைக் குறைக்க முடியாது. அப்படி குறைக்க வேண்டும் எனறால் விமான எரிபொருளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால் தான் வரிகள் குறைந்து, குறைந்த விலைக்கு விமான எரிபொருள் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறார் சுரேஷ் பிரபு.
மாநில அரசு வரிகள்
இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலிடமும் தொடர்ந்து பேசி வருகிறார்களாம். ஆனால் மாநிலங்களுக்கான வாட் வரிகள் கொஞ்சம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதால் யோசித்து வருகிறார்களாம்.
Input Tax Credit
விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வரப்படுவதால் முதலில் விலை கொஞ்சம் குறைவதோடு, சுமார் 5000 கோடி ரூபாய் விமான நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி திரும்பக் கிடைக்குமாம். உள்ளீடு வரி திரும்பப் பெறல் (Input Tax Credit) மூலம் விமான சேவை நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரும்பப் கிடைக்கும் எனச் சொன்னார் சுரேஷ் பிரபு.