டெல்லி: கூகுள் பே (Google Pay) தற்போது ஒரு பெரிய பிரச்னையில் சிக்கி இருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம் கூகுள் பே நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதைக் குறித்து ஆர்பிஐ அமைப்பிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது என்றால் பிரச்னை கொஞ்சம் சீரியஸ் தானே.
இந்தியாவில் ஆன்லைன் முறையில் பணப் பரிமாற்றம் செய்ய Payment and Settlement Systems Act, 2007-ன் கீழ் முறையான உரிமங்களை ஆர்பிஐ இடம் இருந்து பெற வேண்டும். அப்படிப் பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவின் ஆன்லைன் பேமெண்ட் மற்றும் பணப் பரிமாற்றங்களில் ஈடுபடலாம்.
கடந்த மார்ச் 20, 2019 அன்று மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் இருக்கும் அதிகாரபூர்வமான ஆன்லைன் பேமெண்ட் மற்றும் பணப் பரிமாற்ற நிறுவனங்களைப் பட்டியல் இட்டது.
கூகுள் பே இல்லை
அதில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே (Google Pay) பட்டியலிடப்படவில்லை. எனவே அபிஜித் மிஸ்ரா என்கிற தனி நபர் கூகுள் பே (Google Pay) நிறுவனம் இந்தியாவில் உரிமங்கள் இல்லாமல் இயங்குவதைத் தடுக்க வேண்டும் எனப் பொது நல வழக்கு தொடுத்திருக்கிறார்.
அபராதம்
மேலும் கூகுள் பே (Google Pay) நிறுவனத்தை நடத்தும் Google India Digital Services Private Limited நிறுவனத்துக்கு முறையாக இந்தியாவின் ஆர்பிஐ இடம் உரிமம் பெற்று தன் செயலிகளை இயக்காததால் கடுமையான அபராதமும் விதிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.
பிரைவசி பாதிப்பு
இப்படி Google India Digital Services Private Limited நிறுவனம் ஆர்பிஐ இடம் முறையாக அனுமதி வாங்காமல் தன் செயலிகளைப் பயன்படுத்துவது பெரிய தவறு. இந்த முறையற்ற செயல்பாடுகளால் இந்தியப் பொருளாதாரத்துக்கும், இந்திய வங்கிகள் அமைப்பின் ஆன்லைன் பணப் பரிமாற்ற முறையின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும். இந்திய குடிமக்களின் பிரைவஸிகளுக்கு பிரச்னை ஏற்படுத்தும் எனவும் தன் மனுவில் சொல்லி இருக்கிறார்.
விசாரணை
இந்த வழக்கை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி அனுப் ஜெய்ராம் பாம்பானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் "அனுமதி இல்லாமல் எப்படி கூகுள் பே, இந்தியாவில் செயல்படுகிறது" என ஆர்பிஐயிடமே நேரடியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்களாம்.
நோட்டீஸ்
அதோடு கூகுள் இந்தியா நிறுவனத்துக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் "Google India Digital Services Private Limited நிறுவனத்தின் தயாரிப்பான கூகுள் பே (Google Pay or Gpay) எப்படி முறையாக உரிமங்களை வாங்காமல் இந்தியாவில் செயல்படலாம்" என நோட்டிஸ் கொடுத்திருக்கிறார்களாம்.