டெல்லி: 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்து பன்னாட்டு நிதியத்தின் (International Monetary Fund - IMF)கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
சமீபத்தில் தான் ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank - ADB)மற்றும் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) போன்ற அமைப்புகள் இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி கணிப்புகளை வெளியிட்டன.
ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank - ADB)மற்றும் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI) இருவருமே இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7.2 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்திருக்கிறார்கள்.
பன்னாட்டு நிதியம்
2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7.3 சதவிகிதமும், 2020 - 21 நிதி ஆண்டில் 7.5% ஆக அதிகரிக்கலாம் எனக் கணித்திருக்கிறது பன்னாட்டு நிதியம். 2019 - 20 நிதி ஆண்டில் வளரும் இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்து தான் 2020 - 21 நிதி ஆண்டின் வளர்ச்சி இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறது. இதற்கு முன் ஜனவரி 2019-ல் வெளியான கணிப்பில் 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7.5% ஆக இருக்கும் எனக் கணித்திருந்தது ஐ எம் எஃப்.
சரிவு
கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6% மட்டுமே வளர்ந்திருந்தது எனச் சொன்னது மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office - CSO). இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சி என்பதையும் குறிப்பிட்டிருந்தது. இதனால் 2018 - 19 நிதியாண்டுக்கான ஜிடிபி 7 சதவிகிதமாக இருக்கலாம் எனத் தன் (CSO) கணிப்பையும் குறைத்துக் கொண்டது.
இன்னும் சரியும்
2018 - 19 நிதி ஆண்டில் நான்காம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி இன்னும் சரியும் நிலையில் இருக்கிறது. இந்த சூழலில் ஆர்பிஐ தன் பணவீக்கப் பிரச்னைகளில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது. இதற்காக தொடர்ந்து இரண்டு முறை 0.25% வட்டி விகிதங்களையும் குறைத்து தன் வேலையைத் தொடங்கி இருக்கிறது.
சவால்கள்
இந்தியாவின் தொழிற் துறை உற்பத்தி 1.3% ஆக ஜனவரியில் சரிந்திருப்பது, எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1% ஆக பிப்ரவரியில் தேங்கி நிற்பது எல்லாம் இந்தியப் பொருளாதாரத்தின் தேக்கமாகவே பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிந்து வருவதும் பொருளாதாரத்தின் சரிவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை மந்தமாக இருக்கிறது என்பதும் பெரிய எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.