அமெரிக்கா: உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான சூழல் உலக அளவில் சிறப்பாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.
அதோடு இந்திய நாட்டில் இந்திய இளைஞர்கள் தான் ஸ்டார்ட் அப்களை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள் எனச் சொல்லி கைத் தட்டல்களை அள்ளி இருக்கிறார் இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரி சீமா புஞ்சானி.
இந்திய இளைஞர்கள் மத்தியில் ஸ்டார்ட் அப் என்கிற கனவு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அவர்களின் வயதே சாட்சி. இந்தியாவில் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி தலைமை ஏற்று நடத்துபவர்களின் சராசரி வயது 31-ஆக மட்டுமே இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் சீமா புஞ்சானி.
இளைஞர்கள்
தற்போது இந்தியர்களின் சராசரி வயது 29 மட்டுமே. அதனால் தான் இந்தியாவை இளமையான தேசம் எனச் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துபவர்களின் வயது 31-ஆக இருப்பது பெருமைக்குறியது எனவும் பேசி இருக்கிறார்.
ECOSOC
இந்த விவரங்களை ஐநா சபையில் நடந்த எட்டாவது பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (Economic and Social council - ECOSOC) இளைஞர்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.
இளைஞர்கள் கை ஓங்கும்
அடுத்த ஒரு மாதத்துக்கு இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் இந்திய இளைஞர்களின் கையில் இருக்கும் வாக்குகளையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் வைத்துக் கொண்டு மத்திய அரசின் கொள்கைகளைக் கூட மாற்றியமைக்க முடியும் எனவும் சொல்லி இருக்கிறார்.
ஐநாவின் நிலையான வளர்ச்சி
ஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில், இந்த எட்டாவது பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இளைஞர்கள் மாநாட்டில் "அனைவரும் சமமாக முன்னேறுவது, உயர்வது" என்கிற தலைப்பில் பல சர்வதேச தலைவர்கள், இளைஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களையும் அழைத்து ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய விவாதித்திருக்கிறார்கள்.