இந்தியாவில் முதலீட்டாளர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனங்களின் கீழ் மொத்தம் 24.46 லட்சம் கோடி ரூபாய் சொத்து நிவகிக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறது Association of Mutual Funds in India (Amfi) அமைப்பு.
சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்றால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தான். இப்படி முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வகிக்கும் முதல் 10 பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் இந்த 24.46 லட்சம் கோடி ரூபாயில் 82.7% சொத்துக்களை நிர்வகிக்கிறார்களாம். இது கடந்த ஜனவரி 2019 முதல் மார்ச் 2019 வரையான நான்காம் காலாண்டு விவரங்கள் மட்டுமே.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் 80% மேலான முதலீட்டாளர்களின் சொத்துக்களை நிர்வகித்து வருவதாகவும் தரவுகளோடு சொல்லி இருக்கிறது Association of Mutual Funds in India (Amfi)அமைப்பு.
ஹெச்டிஎஃப்சி-க்கு முதலிடம்
ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மட்டும் மொத்த 24.46 லட்சம் கோடி ரூபாயில் 3.42 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்தில் 13.9 சதவிகிதத்தை ஹெச் டி எஃப் சி மட்டுமே நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ-க்கு இரண்டாமிடம்
ஹெச் டி எஃப் சி நிறுவனத்தைத் தொடர்ந்து ஐசிஐசிஐ நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் நான்காவது காலாண்டில் ஐசிஐசிஐ 3.20 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்தில் இது 13.08 சதவிகிதம்.
எஸ்பிஐ-க்கு
எஸ்பிஐ வங்கிகளோடு எஸ்பிஐ அஸெட் மேனேஜ்மெண்ட் என்கிற பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. எஸ்பிஐ மட்டும் 2.83 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்துக்களில் எஸ்பிஐ-ன் பங்கு 11.56 சதவிகிதம். ஆக இந்த மூன்று நிறுவனங்களை மட்டும் எடுத்துக் கொண்டாலே இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் நிர்வகிக்கும் மொத்த சொத்தில் 38% சொத்துக்களை இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே நிர்வகிக்கிறார்கள்.
அதிவேகம் & மந்தம்
இந்தியாவின் டாப் 10 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் மிரே அஸெட் குளோபல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இந்தியா நிறுவனம் தான் மிக அதிக வளர்ச்சி கண்டிருக்கிறதாம். 2018 - 19 நான்காவது காலாண்டில் 2017 - 18 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டை விட 54% அதிக சொத்துக்களை நிர்வகிக்கத் தொடங்கி இருக்கிறதாம். உதாரணமாக 2017 - 18-ன் நான்காவது காலாண்டில் 100 ரூபாய் நிர்வகிக்கிறது என்றால் 2018 - 19 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் 154 ரூபாய் நிர்வகிக்கிறார்கள்.
எஸ்பிஐ சாதனை
மிரே நிறுவனத்தைத் தொடர்ந்து எஸ்பிஐ கடந்த மூன்று மாதங்களில் 30% வளர்ச்சி காட்டி இருக்கிறது. சொல்லப் போனால் 2018 - 19 நிதி ஆண்டில் அதிக சொத்துக்களை தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எஸ்பிஐ தான். இதற்கு அரசின் EPFO-ல் இருந்து வரும் நிதி முதலீடுகள் தான் காரணம் எனவும் சொல்கிறார்கள்.
எல் ஐ சி
மற்றொரு பக்கம் எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ஏற்கனவே நிர்வகிக்கப்பட்டு வந்த சொத்துக்களில் 24 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இருந்து சுமார் 11% சொத்துக்கள் குறைந்திருக்கிறதாம்.