டெல்லி: ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால், அந்த நாட்டில் வியாபாரம் செழிக்க வேண்டும். வியாபாரத்துக்கு பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அல்லது சேவைத் துறை அதிகரிக்க வேண்டும்.
அப்படி பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்றால் அதிக உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட வேண்டும். உற்பத்தி ஆலைகள் அதிகரிப்பதை இரண்டு வழிகளில் கணக்கிடலாம். 1.அரசு கொடுக்கும் உரிமங்கள். 2. மின்சார பயன்பாடு அதிகரிப்பது அல்லது மின்சாரத் தேவைகள் அதிகரிப்பது.
இப்போது மத்திய மின்சார அமைச்சகத்தில் இருந்து மின்சார தேவைகள் மற்றும் நுகர்வு தொடர்பாக சில தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அவை நம் பொருளாதார வளர்ச்சி சுணங்கிக் கிடப்பதைச் சொல்கின்றன.
சரிவு
அந்த தரவுகள் படி பிப்ரவரி 2019-க்கான மின்சார தேவைகள் வெறும் 1.3% மட்டுமே அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. அதற்கு முந்தைய ஜனவரி 2019-ல் கூட மொத்த இந்தியாவுக்குமான மின்சார தேவை 1.1% மட்டுமே அதிகரித்திருக்கிறதாம். கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு மின்சார தேவை ஜனவரி 2019-ல் 1.1% ஆக குறைந்திருக்கிறது. ஆக இந்தியாவில் தொழிற் துறை பெரிதாக வளரவில்லை.
மின்சார உற்பத்தி நிறுவனங்கள்
இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்திய விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கு சலுகை விலையில் மின்சாரத்தை வழங்கச் சொல்கிறது அரசு. ஆக தனியார் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து தான் மொத்த மின்சார செலவுகளையும் மீட்க வேண்டிய கட்டாயத்தில் செயல்படுகிறது மின்சார உற்பத்தி நிறுவனங்கள்.
தொழிற் துறை
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 50 சதவிகித மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தான் விற்கப்படுகிறது. சமீபத்தில் தான் மின்சார நிறுவனங்களுக்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
வியாபாரம் போச்சே
வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலை உற்பத்தியாளர்கள் வழக்கத்தை விட குறைவான மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வருவாய் குறையும் தானே..? அதோடு எல்லா மின்சார நிறுவனங்கள் தங்கள் கெப்பாசிட்டிக்கு குறைவாகத் தான் மின்சாரத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக மின்சார நிறுவனங்கள் பிசினஸ் பாதிக்கப்பட்டு கட்ட வேண்டிய கடன்களை ஒழுங்காக கட்ட முடியாமல் வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும். மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் எனச் சொல்கிறார்கள்.
டிசம்பர் 2018
கடந்த அக்டோபர் - டிசம்பர் 2018 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.6% ஆக சரிந்திருப்பதையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டி இருக்கிறது. அதோடு 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்புகளில் பன்னாட்டு நிதியம் 7.5%-ல் இருந்து 7.3% ஆக குறைத்துக் கொண்டது. அதே 2019 - 20 நிதி ஆண்டுக்கு இந்தியாவின் ஜிடிபியை 7.4%-ல் இருந்து 7.2 சதவிகிதமாக குறைத்துக் கொண்டது மத்திய ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கைகள் எல்லாம் நம் இந்தியப் பொருளாதாரம் சரிவதையே காட்டுகிறது.
பொருளாதார காரணிகள்
இந்தியாவின் தொழிற் துறை உற்பத்தி 1.3% ஆக ஜனவரியில் சரிந்திருப்பது, எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1% ஆக பிப்ரவரியில் தேங்கி நிற்பது எல்லாம் இந்தியப் பொருளாதாரத்தின் தேக்கமாகவே பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிந்து வருவதும் பொருளாதாரத்தின் சரிவாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்களின் விற்பனை மந்தமாக இருக்கிறது என்பதும் பெரிய எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.