டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு டயர் தேவை கடந்த 2018 - 19 நிதி ஆண்டு முதல் 2022 - 23 நிதி ஆண்டும் வரை ஆண்டுக்கு 7 - 9 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ICRA கணித்திருக்கிறது.
எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவின் டயர் தொழிற்சாலைகளில் முதலீடுகள் வரும் என்றும் கணித்திருக்கிறது ICRA.
டயர்களுக்கான தேவை நிலையாக அதிகரித்து வருகிறது. அதோடு டயர் உற்பத்தியாளர்கள் மற்றும் டயர் உற்பத்தி நிறுவனங்கள் வாங்கிய கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
20000 கோடி வரை
எனவே இந்தியாவின் உள்நாட்டு டயர் தயாரிப்பாளர்கள் தங்களின் தயாரிப்பை அதிகரிக்க மேலும் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் எனவும் கணித்திருக்கிறது ICRA. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவின் டயர் உற்பத்தியாளர்கள் சுமார் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடுச் செய்யலாம் என ICRA நிறுவனத்தின் துனைத்ட் தலைவர் ஸ்ரீகுமார் தெரிவித்திருக்கிறார்.
லாப வரம்புகள்
தற்போது 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவின் டயர் உற்பத்தியாளர்களின் வருவாய் 14 - 15 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த வருவாயில் செயல்பாட்டு லாப வரம்பு சுமார் 14 சதவிகிதமாக இருக்கிறது. நிகர லாபம் வரம்பு சுமார் 7 சதவிகிதமாக இருக்கிறது எனவும் சொல்கிறார் ஸ்ரீகுமார்.
குறையும்
வரும் நிதி ஆண்டுகளில் குறிப்பாக 2019 - 20 நிதி ஆண்டு தொடங்கி 2021 - 2022 வரையான நிதி ஆண்டுகள் வரை இந்திய டயர் உற்பத்தியாளர்களின் வருவாய், லாப வரம்பு என அனைத்தும் கொஞ்சம் குறையும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளில் வருவாய் வளர்ச்சி 9 - 10 சதவிகிதம் வரை இருக்கலாம். செயல்பாட்டு லாப வரம்பு 14 - 15 சதவிகிதம் வரை இருக்கலாம். நிகர லாப வரம்பு 6 - 7 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
பொருளாதார மந்த நிலை
சுருக்கமாக உலகப் பொருளாதார மந்த நிலை மற்றும் இந்தியாவின் டிசம்பர் 2018 காலாண்டின் ஜிடிபி வளர்ச்சியில் எதிரொலித்த மந்த நிலை, அனைத்து இந்திய டயர் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும். அதோடு கடந்த ஆண்டுகளில் வரும் லாபத்தை அப்படியே முதலீடு வேறு செய்வதால், வாங்கிய கடன்களுக்கு வட்டி வேறு செலுத்துவதாலும் லாப வரம்புகள் பெரிய அளவில் குறையும் என்பதையும் உணர முடிகிறது.