டெல்லி: பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்களில் குறிப்பாக மும்பை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இந்த வருடம் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் போதும் என்ற பொன் செய்யும் மருந்து என்பதற்கு ஏற்ப வெறும் 10 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வு சொல்கிறது.
சென்னை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் வேலை பார்ப்பவர்களும் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
எல்லோரும் எதிர்பார்ப்பது அதுதான்
பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் ஆண்டுதோறும் எதிர்பார்ப்பது சிறிதளவாவது ஊதிய உயர்வுதான். அதை வைத்துத் தான் பெரிய அளவில் இல்லாமல் போனாலும் சிறிதளவாவது சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு திட்டம் தீட்ட முடியும். ஆகவேதான் பார்க்கும் அனைத்து ஊழியர்களும் ஒவ்வொது ஆண்டும் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு.
பை நிறைய சம்பளம்
பெரு நகரங்களில் உள்ள நிறுவனங்கள் அளிக்கும் ஊதியமும் ஆண்டு தோறும் அளிக்கும் ஊதிய உயர்வும் அந்தந்த நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் கிடைக்கும் நிகர லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்குவதுண்டு. தகவல் தொழில் நுட்பத் துறை நிறவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஊதியமும் ஊதிய உயர்வும் மற்ற நிறுவங்களை விட நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகமாகவே இருக்கும்.
இங்கெல்லாம் சம்பளம் அதிகம்தான்
இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு கதவை திறந்துவிட்ட பின்னர் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றிய பின்னர், மும்பை, பெங்கரூரு புனே மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் மாத ஊதியம் என்பது பிற நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பெறும் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
எதிர்பார்ப்பு ரொம்ப கம்மிதான்
சமீபத்திய ஆய்வறிக்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நிலைமை இப்படி இருக்கும்போது தற்போது வந்துள்ள ஆய்வறிக்கை பெரு நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் இந்த வருடம் மிகவும் குறைவான ஊதிய உயர்வையே எதிர்பார்ப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது.
ஏப்ரல் சந்தோசம்
பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை ஆண்டு தொடக்கத்திலேயே வழங்கிவிடுவது வாடிக்கை. அதுவும் தகவல் தொழில்நட்பத் துறை நிறுவனங்கள் அனைத்தும் கண்டிப்பாக ஏப்ரல் மாதத்திலேயே ஊதிய உயர்வை வழங்கிவிடும்.
20 சதவிகி ஊதிய உயர்வு போதுமே
மும்பை, சென்னை, புனே போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நட்பத் துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் இந்த வருடம் 20 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. அதுவும் அனுபவசாலிகளான வல்லுநர்களே 20 சதவிகிதம் போதும் என்ற மனநிலையில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பெங்களூருவுக்கு 10 போதுமாம்
தலைநகரமான டெல்லி மற்றும் பெங்களூருவில் 10 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று ஊழியர்கள் நினைப்பதாக ஷைன் டாட் காம் (Shine.Com) என்ற வேலை தேடு தளம் நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மும்பை, டெல்லி, சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
உனக்கு 20 எனக்கும் 20
மும்பையில் நடத்திய ஆய்வில் 37 சதவிகிதம் பேர் 20 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று வாக்களித்துள்ளனர். அதே சமயம் சென்னையில் 36 சதவிகிதம் ஊழியர்களும் புனேயில் 38 சதவிகிதம் ஊழியர்களும் 20 சதவிகித ஊதிய உயர்வே அதிகம் என்று வாக்களித்துள்ளனர்.
ஷைன் டாட் காம்
மும்பையில் கல்வி மற்றும் பயிற்சித் துறையில் உள்ளவர்களில் 62 சதவிகித ஊழியர்கள் 20 சதவிகிதம் போதும் என்றும், வாகனத் துறையில் உள்ளவர்களில் 56 சதவிகித ஊழியர்கள் அதே 20 சதவிகிதம் போதும் என்றும் வாக்களித்துள்ளனர் என்று ஷைன் டாட் காம் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.
இ-காமர்ஸ்க்கு 15 போதும்
பெங்களூருவில் இ-காமர்ஸ் துறையில் பணி புரியும் ஊழியர்களில் 46 சதவிகித ஊழியர்கள் 11 முதல் 15 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால் வங்கி, நிதி மற்றும் காப்பீடு போன்ற நிதிச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 35 சதவிகித ஊழியர்கள் 20 சதவிகித ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக ஆய்வு சொல்கிறது. பெங்களூருவில் இ.காமர்ஸ் துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லி வைத்ததுபோல 11 முதல் 15 சதவிகித ஊதிய உயர்வே போதும் என்று வாக்களித்திருப்பது ஆச்சரியம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.