டெல்லி: வங்கியில் லோன் தருவதாக சொன்னால் ஆதார் கார்டை கொடுத்து தங்களைப்பற்றிய அத்தனை தகவலையும் பகிர்ந்து கொள்ள தயாராகவே இருக்கின்றனர், இந்தியாவில் பத்தில் ஏழு பேர் பெரும்பாலான நுகர்வோர், தள்ளுபடி ஆஃபர், சிறப்பு தள்ளுபடி, போனஸ் புள்ளிகள் போன்ற சின்னச் சின்ன சலுகைகளுக்காக தங்ககளைப் பற்றிய சுய தகவல்கள் அனைத்தையுமே வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக ஆக்சென்டர் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே தங்களைப் பற்றிய அனைத்து சுய விவரங்களையும் அதிக அளவில் பகிர்ந்து கொள்ள முன்வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் குறிப்பிட்ட சேவைகள், சலுகைகளை எதிர்பார்த்தும் இந்திய நுகர்வோர் தங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியர்களில் பெரும்பாலும் தனிநபர் கடன், கட்டணச் சலுகை போன்றவற்றுக்காகவே தங்களின் வசிப்பிடம் குறித்த தகவலை அளிக்க முன்வருவதாகவும் அக்சென்டர் ஆய்வு தெரிவிக்கிறது, அதே நேரத்தில் தாங்கள் பகிரும் கருத்துக்கள், தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று ஐந்தில் நான்கு பேர் அதாவது 81 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
ஆக்சென்டர் ஆய்வு
உலகம் முழுவதும் 47ஆயிரம் இது தொடர்பான ஆய்வினை ஆக்சென்டர் நிறுவனம் மேற்கொண்டது. இந்த ஆய்வில் 2000 இந்தியர்கள் பங்கேற்றனர். அப்போது மூன்றில் இரண்டு பேர் தங்களைப் பற்றிய சுய தகவல்களை லோன்களை வாங்கவும், ஜிம்மில் தள்ளுபடி பெறவும் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
சுய அடையாளம்
இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் தங்களின் விற்பனைப் பெருக்கத்திற்காகவும், வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும் விழாக்கால சலுகை, தள்ளுபடி சலுகைகளை அள்ளி வீசுவது வழக்கம். வாடிக்கையாளர்களும் தள்ளுபடி சலுகை, போனஸ் புள்ளிகள் மற்றும் சிறப்புத் தள்ளுபடி போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு தங்களின் சுயவிவரம் மற்றும் சுய அடையாளம் என அனைத்து விவரங்களையும் அப்படியே தள்ளுபடி சலுகை வழங்கும் நிறுவனங்களுக்கு அளிப்பது வாடிக்கை.
வெளியாகும் ரகசியம்
தங்களின் சுய விவரங்களை மேற்படி நிறுவனங்களுக்கு அளிப்பதால் தங்களின் சுய விவரங்களும் ரகசியங்களும் சமூக ஊடகங்களில் வெளிவரும் என்ற உண்மை பெரும்பாலான நுகர்வோர்க்கு தெரிவதில்லை. அனைவரும் தூண்டில் மீனுக்கு ஆசைப்படும் மீன்களாகவே இன்னமும் இருப்பது வேடிக்கையான மற்றும் வேதனையானது.
சொந்த காசில் சூனியம்
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் பிரத்யேக சேவைகளுக்காக தங்களின் சுய விபரங்களை தெரிவிப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் 67 சதவிகிதமும் அண்டை நாடான சீனாவில் 69 சதவிகிதமாகவும் உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் தள்ளுபடி மற்றும் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்காக இந்தியாவில் மட்டும் 10க்கு 7 பேர் தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒளிவு மறைவும் இன்றி வழங்கி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர்.
சம்பளம் முதல் வசிப்பிடம் வரை
இந்திய நுகர்வோரில் மூன்றில் இரண்டு பங்கினர், கடனுக்கு ஒப்புதல் பெறவும் உடற் பயிற்சி கூடங்களில் கட்டணச் சலுகை கிடைக்கவும், சினிமா தியேட்டர்களில் தள்ளுபடி கூப்பன் பெறவும், பிற தனிப்பட்ட சேவைகளுக்காகவும் தாங்கள் வசிப்பிடம் முதல் சம்பளம் வரை அனைத்து தகவலையும் அளிக்க முன்வருகின்றனர். நுகர்வோரின் நோக்கம் தங்களின் தேவை நிறைவேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளே.
தகவல் மோசடி
வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் குறிப்பிட்ட சேவைகள், சலுகைகளை எதிர்பார்த்தும் இந்திய நுகர்வோர் தங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் தாங்கள் பகிரும் கருத்துக்கள், தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று ஐந்தில் நான்கு பேர் அதாவது 81 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். தங்களின் தனிப்பட்ட விபரங்களின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களின் புகார்களுக்கு விரைவாக தீர்வு காணவும் வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுடன் சுய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
சில்லறை விற்பனையாளர்கள்
92 சதவிகித நுகர்வோர்கள் எதிர்பாராத இழப்பினால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்ற நோக்கத்தில் தங்களைப் பற்றிய சுய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதே போல கடன் விண்ணப்பங்களுக்கு விரைவாக அனுமதி பெற வேண்டும் என்ற நோக்கில் தங்களைப் பற்றிய தகவல்களையும் வருமானம், இருப்பிடம், லைப்ஸ்டைல், விருப்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். சிலர் விற்பனையாளர்களிடம் தள்ளுபடிக்காகவும் சுய விபரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனராம்.