மும்பை: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகளோடு, 2018 - 19 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைகளும் வெளியாகி இருக்கின்றன. 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் சுமார் 11.4 சதவிகிதம் வருவாய் வளர்ச்சி கண்டிருக்கிறதாம்.
டிசிஎஸ் நிறுவனம் தன்னுடைய கான்ஸ்டண்ட் கரன்ஸியைக் கணக்கிட மார்ச் 31, 2019 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை வைத்தே கணக்கிட்டு இருக்கிறார்களாம்.
டிசிஎஸ் நிறுவனத்தின்செயல்பாட்டு லாபம் வரம்பு 25.1% ஆக இருக்கிறதாம். கடந்த மார்ச் 2018-ஐக் காட்டிலும் 0.31 சதவிகிதம் குறைவு எனக் கவலைப் படுகிறார்களாம்.
15 காலாண்டுகளில் இல்லாதது
மார்ச் 2019 காலாண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கான்ஸ்டண்ட் கரன்சி அடிப்படையில் வருவாய் வளர்ச்சி 18.5 சதவிகிதமாக இருக்கிறதாம். கடந்த மார்ச் 2018 காலாண்டில் இதே கான்ஸ்டண்ட் கரன்சி அடிப்படையில் வருவாய் 12.7 சதவிகிதம் வலர்ச்சி கண்டது குறிப்பிடத்தகக்து. கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத வருவாய் வளர்ச்சியை இந்த காலாண்டில் எட்டிப் பிடித்திருக்கிறார்களாம். டிசிஎஸ்-ன் ஆர்டர் புத்தகங்கள் கடந்த மூன்று காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறதாம்.
மிஞ்சிய டிசிஎஸ்
மார்ச் 2019 காலாண்டுக்கு மட்டும் டிசிஎஸ் நிறுவனம் 38,010 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்கிறது. லாபமாக 8,126 கோடி ரூபாய் ஈட்டி இருக்கிறது. சந்தைகளில் பல்வேறு அனலிஸ்டுகளும் தரகு நிறுவனங்களும் கணித்திருந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி 8,126 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருக்கிறது டிசிஎஸ். ப்ளூம்பெர்க் நிறுவனம் டிசிஎஸ்-ன் மார்ச் காலாண்டு முடிவுகளில் சுமார் 37,829 கோடி ரூபாய் வருவாயும், லாபமாக 7,970 ரூபாயும் ஈட்டும் எனக் கணித்திருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஈட்டி இருப்பதால் நாளை சந்தையில் இந்த பாசிட்டிவ் செய்தி பிரதிபலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
எங்கிருந்து அதிகம்
ஐடி சந்தையைப் பொறுத்தவரை டிசிஎஸ் நிறுவனத்துக்கு இங்கிலாந்தில் இருந்து 21.3% வருவாய் கூடுதலாக வந்திருக்கிறதாம். அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 17.5%, வட அமெரிக்காவில் இருந்து 9.9% என வருவாய் அதிகரித்திருக்கிறதாம். வழக்கம் போல டிசிஎஸ்-க்கு வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளில் இருந்து 11.6% வருவாய் கூடுதலாக வந்திருக்கிறதாம்.
வாடிக்கையாளர்கள்
100 மில்லியன் டாலருக்கு மேல் 44 நிறுவனங்களை வைத்திருக்கிறார்களாம். 50 மில்லியன் டாலருக்கு மேல் 99 நிறுவனங்களை கையில் வைத்திருக்கிறார்களாம். இது டிசிஎஸ்க்கு மட்டுமே சாத்தியமாகும் சாதனை என சந்தை வல்லுநர்கள் மெச்சிக் கொள்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் 29,287 பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். ஜனவரி முதல் மார்ச் 2019 வரை மட்டும் 6,356 பேரை புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம்.