பெங்களூரு: பெங்களூர் விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்த 21 சுங்க வரித் துறை அதிகாரிகள் மீது சிபிஐ-ன் கீழ் செயல்படும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
க்ருபலானி என்பவர் நெக்ஸ்ட் ஜென் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் உரிமையாளர். பெங்களூரில் வசிக்கிறார். இவர் சில பொருட்களை வெளிநாடுகளில் இருந்து முறையாக இறக்குமதி செய்திருக்கிறார்.
அப்போது சுங்க வரித் துறை அதிகாரிகள் முறையாக இறக்குமதி செய்த பொருட்களை வெளியில் கொண்டு செல்ல 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள்.
லஞ்சத்தைக் கொடுக்காததால் போலியான சில ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காகிதங்களை வைத்து க்ருபலானி பொருட்களை கண்ட மேனிக்கு சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் க்ருபலானியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
எனவே முதலில் சுங்க வரித் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். பயனில்லை. எனவே மத்திய அரசின் சிபிஐ-ன் கீழ் இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் தான் இந்த 21 அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
அந்த 21 அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு துணை போன 7 உதவியாளர்கள் என எல்லோர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது சிபிஐ. பிடிபட்ட 21 சுங்க வரித் துறை அதிகாரிகளில் ஒரு கூடுதல் ஆணையர், ஒரு இணை ஆணையர், 11 கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள் என மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்களே இந்த தவறைச் செய்திருக்கிறார்கள்.
இந்த 21 பேர் மீதும் லஞ்சம் கேட்டது, போலி ஆவணங்களை வைத்து ரெய்டு நடத்தியது, கூட்டுச் சதியில் ஈடுபட்டு க்ருபலானி மீது அதிகார துஸ்பிரயோகம் செய்தது. மோசமான நடத்தை என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம்.
கூடுதல் ஆணையர் டி அனில்
இணை ஆணையர் சுஜித் குமார்
கண்காணிப்பாளர்கள் லிங்கராஜு, ப்ரமோத் குல்வாடி, செந்தாமரைச் செல்வி, சுனில் குமார் சிங், நாராயணன், பி ஜி ஷெனாய், சவன், விஸ்வேஸ்வர் பட், பி எம் ராமசந்திரா, தேவப்பா நாயக், நரசிம்மப்பா
ஆய்வாளர்கள் - பசவராஜ், எம் வி ஸ்ரீனிவாஸ், நிரஞ்சன் மூர்த்தி, குருராஜ் நாயக், கஸ்தூரி, எஸ் எஸ் லக்ஷ்மி, நஸ்ருதீன், அப்துல் ஆசிஸ்
வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைக்கு முதல் கட்ட தண்டனையாக அனைவருக்கு வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றல் கொடுத்திருக்கிறார்களாம்.