டெல்லி: இந்தியாவில் எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, சிக்கலான மற்றும் நூதனமான கார்ப்பரேட் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், பணம் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு தான் இந்த Serious Fraud Investigation Office (SFIO).
இன்று (ஏப்ரல் 13, 2019) கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஐ எல் அண்ட் எஃப் எஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ரமேஷ் பாவாவை இந்த Serious Fraud Investigation Office (SFIO) அமைப்பினர் கைது செய்திருக்கிறார்கள்.
ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு கண்ட மேனிக்கு, கடன்களைக் கொடுத்திருக்கிறார். அதுவும் அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவார்களா என்பதைக் கூட பரிசீலிக்காமல், கடன் கொடுக்க தகுதியே இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்திருக்கிறார் எனச் சொல்லி கைது செய்திருக்கிறார்களாம்.
நஷ்டம்
இதனால் ஐ எல் அண்ட் எஃப் எஸ் (IL&FS) ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருப்பவர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2018-ல் தான் ரமேஷ் பாவா ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகல்
அந்த செப்டம்பர் 2018 காலத்தில் தான் IL&FS நிறுவனம் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிக்கத் தொடங்கிய விஷயம் அப்போது தான் வெளியே தெரியத் தொடங்கியது. அதன் பின் IL&FS நிறுவனத்தின் இயக்குநர் குழுவை கலைத்துவிட்டு அரசு ஒரு இயக்குநர் குழுவை அமைத்து வழி நடத்தச் சொன்னது.
சம்பளம் கும்மாளம்
அதன் பின் தான் மேலே சொன்ன Serious Fraud Investigation Office (SFIO)-வை அழைத்து ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனம் குறித்து விசாரிக்கச் சொன்னது. விசாரணைகளின் முதல் படியிலேயே, நிறுவனம் லாபமே ஈட்டாத போதிலும் உயர் அதிகாரிகளுக்கு அதிகப்படியான சம்பளம் மற்றும் பணச் சலுகைகளைக் கொடுத்தது தெரிய வந்தது. ஆக கடனாக வாங்கிய தொகைகளைக் கூட உயர் அதிகாரிகளுக்கு சம்பளமாகக் கொடுத்து ஃபண்டுகளை divert செய்து விட்டார்களோ எனவும் விசாரித்து வருகிறார்களாம்.
ஏமாந்த நிறுவனங்கள்
IL&FS நிறுவனம் வங்கிக் கடனாகவும், கடன் பத்திரங்கள் மூலமாகவும் 17,500 கோடி ரூபாயை வாங்கி இருக்கிறார்கள். பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் என பலரும் ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது தான் வருத்தமான விஷயம்.