பெங்களூரு: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க 220 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கி இருக்கிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டில் வந்த வருவாயில் இருந்து தான் இந்த 220 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது டிசிஎஸ். இந்த நன்கொடிஅய தன் செலவுக் கணக்கில் காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
ஆனால் எந்தக் கட்சிக்காக இந்த 220 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது என்கிற விவரங்கள் இதுவரை தெரியப்படுத்தப் படவில்லை.
நன்கொடைகள்
கடந்த காலங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் உட்பட டாடா குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்காக சில நன்கொடைகளை தங்களில் ட்ரஸ்டுகள் மூலமாக மறைமுகமாக கொடுத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நன்கொடைகளை முதலில் டாடா குழும நிறுவனங்கள் டாட்டாவின் Progressive Electroal Trust-க்கு மாற்றிவிடுவார்கள். அதன்பின் அந்த Progressive Electroal Trust, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பணத்தை நன்கொடையாக கொடுக்கும்.
ட்ரஸ்ட் மூலமாகத் தான்
எப்போதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்காது. அப்படி வழங்க வேண்டும் என்றால் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு அரசியல் டிரஸ்டுக்கு நன்கொடை தொகைகளைக் கொடுக்கும். அதன்பின் அந்த அரசியல் டிரஸ்டுகள் தான் அரசியல் கட்சிகளுக்கு தேவையான நன்கொடைகளை கொடுக்கும்.
காங்கிரஸ், பீஜு ஜனதா தளம்
கடந்த 01 ஏப்ரல் 2013 தொடங்கி 31 மார்ச் 2016 வரையான 3 ஆண்டுகளில் டாடா குழும நிறுவனங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்து இருக்கிறார்கள். அதில் முதலிடம் வகிப்பது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு அதிக நன்கொடைகளை வழங்கி இருக்கிறது டாட்டா நிறுவனம்.
பெரிய கை
இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர்தல் டிரஸ்ட் என்றால் அது Prudent Trust தான். இந்த trust மூலம் பார்தி குழும நிறுவனங்கள் மற்றும் டிஎல்எஃப் நிறுவன குழுமங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்கள். கடந்த 2017 - 18 நிதி யாண்டில் புருடன்ட் டிரஸ்டுக்கு 169 கோடி ரூபாய் நிதி வந்தது. அதில் 144 கோடி ரூபாயை பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறது.