மதுரை: தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரை வாசிகள் சிக்கன் பிரியாணியை அதிகளவில் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜோமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜோமாட்டோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் எந்த வகையான உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவித்திருந்தது. 2018-2019 நிதி ஆண்டுக்கான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
2018-2019 நிதி ஆண்டில் ஜோமாட்டோ நிறுவனம் 200 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வளர்ச்சி அடைந்த அதே நேரம் ஜோமாட்டோவின் செலவுகளும் 5 மடங்குகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
வீட்டில் உணவு சமைத்து சொந்த பந்தங்கள் சேர்ந்து சாப்பிட்ட காலம் போய் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வந்தனர். இப்போதோ மனதை அழுத்தும் வேலைப்பளுவினால் ஹோட்டலுக்கு போக கூட நேரமின்றி உணவு ஆப்கள் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் காலம் வந்து விட்டது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வண்ண வண்ண உடையணிந்த டெலிவரி மனிதர்கள் உணவுப்பொட்டலங்களை சுமந்து கொண்டு போய் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஒரே ஆர்டருக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
ஒரே ஆர்டரில் குவிந்த பணம்
ஒரே ஆர்டருக்கான கட்டணமாக 1,84,760 ரூபாயை ஜோமாட்டோ வசூலித்துள்ளது. 415 பெட்டிகளில் உணவை பேக் செய்து கப்பலில் பிரம்மபுத்ரா ஆற்றைக் கடந்து சென்று டெலிவரி செய்துள்ளது.
மதுரையில் சிக்கன் பிரியாணி
இது தவிர எந்த ஊர் மக்கள் எந்த மாதிரியான உணவை அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரை வாசிகள் சிக்கன் பிரியாணியை அதிகளவில் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் பீட்சா
குஜராத்தின் ஆனந்த் நகரில் பீட்சாவை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர். ஜம்மு ஜாஷ்மீரில் துரித உணவுகளை ஜோமாட்டோவில் அதிகளவில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். மெட்ரோ நகரங்களை தவிர்த்து குஜராத்தின் அகமதாபாத்தில் அதிக உணவு டெலிவரி ஆர்டரை ஜோமாட்டோ பெற்றுள்ளது.
200 சதவிகித வளர்ச்சி
2018-2019 நிதி ஆண்டில் ஜோமாட்டோ நிறுவனம் 200 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வளர்ச்சி அடைந்த அதே நேரம் ஜோமாட்டோவின் செலவுகளும் 5 மடங்குகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் சலுகைகள் அதிகளவில் அளித்ததே முக்கிய காரணம் என்று மாட்டோ கூறியுள்ளது.