பாலகாட்: மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் பாலகாட் பகுதியில் ஒரு விசித்திரமான பிரச்னையை தேர்தல் ஆணையம் சந்திக்கிறது.
கிஷோர் சம்ரிட்டே (Kishore Samrite) முன்னாள் சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். தற்போது சுயேட்சை வேட்பாளராக பாலகோட் மக்களவைத் தொகுதியில் நிற்கிறார்.
இப்போது தேர்தல் செலவுகளுக்கு தேர்தல் ஆணையமே தனக்கு 75 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் அல்லது தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.
கடிதம்
பாலகாட் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கிஷோர் சம்ரித்தே கொடுத்த கடிதத்தில் "தேர்தல் ஆணையம் ஒரு மக்களவைத் தேர்தல் வேட்பாளர் 75 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது. ஆனால் என்னிடம் தேர்தலுக்காக செலவழிக்க பணம் இல்லை. நான் எதிர்த்து போட்டி போடுபவர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள். அடுத்த 15 நாட்களுக்குள் என்னால் இத்தனை பெரிய தொகையை மக்களிடம் இருந்து திரட்ட முடியாது".
அனுமதி வேண்டும்
"எனவே இந்த 2019 மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள, தேர்தல் ஆணையமே 75 லட்சம் ரூபாயைக் கொடுக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் 75 லட்சம் ரூபாயை வங்கிக் கடனாக எனக்குக் கிடைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அதுவும் முடியாது என்றால் என்னுடைய ஒரு சிறு நீரகத்தை விற்க அனுமதிக்க வேண்டும்" என உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.
நடை போராட்டம்
இந்த கடிதத்தைப் பற்றிப் பேசிய கிஷோர் சம்ரித்தே "இது என் வழியிலாக, இந்த சிஸ்டத்தை எதிர்க்கும் போராட்டம். குற்றப் பிண்ணனிக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டி இடுவதைத் தடுக்க முடியும் என்றால், இப்படி பணத்தை வாரி இரைக்கும் வேட்பாளர்களையும் போட்டியிடாமல் தடுக்கலாமே..? என கிஷோர் கேள்வி எழுப்புகிறார்.
பணம் எங்கே
அதோடு "இந்த நாட்டில் சாதாரண குடிமகன் கூட பிரதமர் ஆவதற்கான உரிமை உண்டு. ஆனால் இங்கு இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் எப்படி ஒரு சாதாரண ஏழை தேர்தலில் பங்கேற்க முடியும்.? என மீண்டும் கேள்வி எழுப்புகிறார். இதுவரை கிஷோருக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து பதில் வரவில்லையாம். ஏப்ரல் 19, 2019-க்குள் பதில் வரவில்லை என்றால் நடை பயணமாக மாநில தேர்தல் ஆணையத்துக்குச் சென்று தன் போராட்டத்தைக் காட்டப் போகிறாராம்.
சட்டத்தில் இடம் இல்லை
பாலகாட் தேர்தல் அதிகாரி தீபக் ஆர்யா இந்த கடிதத்தைப் பற்றிப் பேசிய போது "தேர்தல் ஆணையம் கிஷோர் சம்ரித்தேவின் வேண்டுகோள்களை நிறைவேற்ற எந்த வழியும் இல்லை. எந்த ஒரு தேர்தல் சட்டங்களும் இவருடைய கோரிக்கைகளைப் பற்றிப் பேசவில்லை என பதிலளித்தார். அதோடு கிஷோர் சொன்னது போல மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு உச்ச வரம்பு 75 லட்சம் இல்லை 70 லட்சம் ரூபாய் எனவும் திருத்தி இருக்கிறார்.