டெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே நடப்பாண்டில் 160 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் சமீபத்தில் வெளிவந்த ஒரு அறிக்கையில் படிக்க நேர்ந்தது.
இதை நீருபிக்கும் விதமாக தற்போது தைவானைச் சேர்ந்த, 'ஃபாக்ஸ்கான்' நிறுவனம், இந்தியாவில் இந்தாண்டு 'ஆப்பிள் ஐபோன்' சாதனங்கள் தயாரிப்பை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே 'நோக்கியா' நிறுவனத்தின் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பிரச்னை காரணமாக, நோக்கியா நிறுவனம் மொபைல்போன் தயாரிப்பை நிறுத்தியது. இதயடுத்து 2015ல் ஃபாக்ஸ்கான் மூடப்பட்டது. இந்நிலையில், 2018ல், நோக்கியா பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைத்தது. இதையடுத்து ஃபாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலையில், இந்தாண்டு ஆப்பிள் ஐபோன் தயாரிப்பை துவக்க உள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மோடியை சந்திக்க உள்ளோம்
மேலும் இது தொடர்பாக, பிரதமர் மோடியை, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் டெரி கோ விரைவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தைவானைச் சேர்ந்த ‘விஸ்ட்ரான்' நிறுவனம், பெங்களூரில் ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களை தயாரித்து வருகிறது.
ஏற்கனவே அசெம்பிளிங்க் செய்தது
இந்த நிலையில் இந்நிறுவனம், புதிய ஆப்பிள் போன் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களின் புதிய மாடல்களை தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஃபாக்ஸ்கான் ஏற்கனவே, ஆப்பிள் ஐபோன்களை "அசெம்பிளிங்" செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவை மிஞ்சிய வளர்ச்சி
இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை விஞ்சி வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2018ல் மட்டும் இந்தியா, 14.23 கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 14 சதவிகிதம் அதிகம். இந்தியாவில் அமேசான் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடி தள்ளுபடிகளால் ஸ்மார்ட்போங்களின் விற்பனை மிக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத வளர்ச்சி
குறிப்பாக வலைதளம் சார்ந்த பொருட்கள் விற்பனையில் ஸ்மார்ட் போன் பங்கு இதுவரை இல்லாத அளவிற்கு 38.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 42.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அன்னிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போதே இந்த அளவு எனில், இனி இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படும் போது இதன் விலை எப்படி இருக்கும் என்ற கேள்விகளும் நிலவி வருகின்றன.
இந்திய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் இருந்திருக்கலாம்?
தைவான் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஆரம்பிக்கப்படுவதால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், இதனால் இந்தியா நிறுவனங்கள் பாதிப்படையலாம் என்றும் கருத்தும் நிலவி வருகிறது. அன்னிய நாடுகளின் நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்தியாவிலுள்ள சொந்த நிறுவனங்களுக்கு கொடுத்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது சமூக ஆர்வலகளின் கருத்தாகும். இதன் மூலம் இந்திய பொருளாதராமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் சிறு குறு நிறுவனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.