இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2018 - 19 நிதி ஆண்டுக்கு 176 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்கள் முழுமையாக விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றிலேயே, ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்புப் படி, 2018 - 19 நிதி ஆண்டில் தான் அதிகபட்சமாக 331 பில்லியன் டாலரை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.
அதோடு இந்தியா முதல் முறையாக 300 பில்லியன் டாலர் மதிப்புக்கு மேல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியா மற்ற உலக நாடுகளுக்கு செய்த ஏற்றுமதியின் மொத்த அளவு 331 பில்லியன் டாலர். 2017 - 18 நிதி ஆண்டில் 303.52 பில்லியன் டாலர்.
ஏற்றுமதி எப்படி வேகமாக அதிகரித்திருக்கிறதோ அதே போல இறக்குமதியும் அதே வேகத்தில் அதிகரித்திருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த இறக்குமதி 507.44 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 42 பில்லியன் டாலர் அதிகம்.
அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பொறியியல் சார்ந்த பொருட்கள், ஆட்டோமொபைல்கள், ஆடைகள், உணவுப் பொருட்கள் டாப் லிஸ்டில் இருக்கின்றன. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் ஏற்றுமதி கொஞ்சம் குறைந்திருக்கிறது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 25 சதவிகிதத்துக்கு மேல் இருப்பது பொறியியல் சார்ந்த பொருட்கள் தான். ஆனால் இனி வருங்காலங்களில் பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி அத்தனை சிறப்பாக இருக்காது, சவால் நிரம்பியதாக இருக்குமென பன்னாட்டு நிதியம் (IMF), ஆர்பிஐ என பல்வேறு அமைப்புகள் எச்சரித்திருக்கிறார்கள்.
அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கச்சா எண்ணெய், தங்கம் போன்றவைகள் வழக்கம் போல முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. இவைகள் இரண்டுமே வாங்கிய விலையின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. கச்சா எண்ணெய் மட்டும் சுமார் 140 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறோம்.