டெல்லி : கடனில் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ்ஸூக்கு யாரும் கடன் கொடுக்க முன்வராததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை முழுமையாக நிறுத்தி விட்டது. கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்த ஜெட் ஏர்வேஸ் கொஞ்சம் கொஞ்சமாக தனது சேவையை குறைத்துக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், வாடகை விமானங்களுக்கு குத்தகை பாக்கி தர முடியாமலும், இந்தியம் ஆயில் நிறுவனத்திற்கு விமான எரிபொருளுக்கான கட்டணமும் தராமல் போகவே இதற்கெல்லாம் தீர்வாக வங்கிகளிடம் கடன் கேட்டது.
அந்த நிறுவனம் கேட்ட முதல் கட்ட 400 கோடி ரூபாய் கடன் கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சர்வதேச சேவையை மட்டுமே செய்து வந்த நிறுவனம் தற்போது உள் நாட்டு சேவையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
அமிர்தசரஸூக்கு கடைசி விமானம்
மும்பையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸூக்கு செல்லும் விமான சேவை தான் கடைசியாக இயக்கப்படும் சேவையாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை முடங்கியுள்ளது.
அவசரகால கடன் கிடைக்கவில்லை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவசரகால கடன் கிடைக்கவில்லை என்றும். இதனால் எரிபொருள் உள்ளிட்ட செலவுகளை நிறுவனம் தாங்காது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. ஆக இன்றே கடைசி விமானம் பறக்கிறது என்றும் அறிவித்துள்ளது.
பரிசீலித்த பிறகே வேதனையான முடிவு எடுத்ததாம்
அனைத்து விதமான சாத்தியங்களையும் பரிசீலித்த பிறகே இப்படியொரு வேதனையான முடிவை எடுத்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கூறியுள்ளது.இதில் வேதனையான விஷயம் என்னவெனில் நூற்றுக்கும் அதிகமான விமானங்களை வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. இந்த நிலையில் வெறும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் போதிய நிதி இல்லாமல் முற்றிலும் விமான சேவை முடங்கியுள்ளது.
போதிய பணப்புழக்கத்திற்கு வேறு வழியில்லை
வங்கிகள் கடன் அளிக்க போவதில்லை என்று நிரகரித்த நிலையில், வேறு வழியில்லாத ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை வழங்கவில்லை. தற்போது வரை அதை இழுக்கடித்து வருவதும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் அனைத்து உழியர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புத்துயிர் பெற 10 ஆயிரம் கோடி
தற்போது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மீண்டும் பழைய சூழ்னிலைக்கு வரவேண்டுமெனில், புத்துயிர் பெற 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது என்றும் விமானத்துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
இன்று இரவிலிருந்து விமானசேவை ரத்து
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்றிரவில் இருந்து தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. வங்கியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை உடனடியாக கிடைக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.