மும்பை : ஜெட் கடனில் தத்தளித்து வருவதும், அதை தற்போது எஸ்.பி.ஐ வசமிருப்பதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் எஸ்.பி.ஐ வங்கி ஏற்கனவே விடுத்திருந்த அறிக்கையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எடுத்த நடத்த விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஜெட் ஏர்வேஸை ஏற்று நடத்த இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலும் விண்ணப்பித் திருந்தார் என்பது தான்.
ஏற்கனவே இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் நரேஷ் கோயலிடம் பொறுப்பை அளிக்க எஸ்பிஐ தலைமையிலான குழு தயக்கம் காட்டியுள்ளது. இந்த நிலையில் தமது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நரேஷ் கோயல் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 25-ம் தேதி ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயலும் அவரது மனைவி அனிதாவும் வெளியேறினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய கடனுக்கு ஈடாக நரேஷ் கோயல் வசமிருந்த பங்குகளை எஸ்.பி.ஐ வசம் ஒப்படைக்கப் பட்டது.
இயக்குனர் குழுவிலிருந்து வெளியேறினார்
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்காக இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறுவதாக கோயல் அறிவித்திருந்தார். இவர் வெளியேறியதைத் தொடர்ந்து பிற முதலீட்டாளர்கள் அல்லது புதிய ஏர்வேஸ் நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸை ஏற்று நடத்த முன்வரும் என்று எஸ்பிஐ எதிர்பார்த்தது, மேலும் அதற்கான விண்ணப்பங்களையும் எதிர்பார்த்தது.
விண்ணபித்தவர்களில் கோயலும் ஒருவர்
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் விண்ணபித்திருந்தன. இதில் விண்ணப்பித்த நிறுவனங்களுள் ஒன்றாக முன்னாள் தலைவர் நரேஷ் கோயலும் விண்ணப்பித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் நரேஷ் கோயலும் அதிலிருந்த தனது விருப்பமனுவை திரும்பக் பெற்றுக் கொண்டார்.
விலை சரிவு
அதேசமயம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊழியர் பிரச்சனை, குத்தகை பாக்கி, எரி பொருளுக்கான கட்டணம் இதையெல்லாம் கருத்தில் கொண்ட நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியானது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த செவ்வாய்கிழமையன்று (16 ஏப்ரல் 2019) சுமார் 8 சதவிகிதம் வரை சரிந்தன. மும்பை பங்குச் சந்தையி்ல 8.50 சதவிகிதம் சரிந்து 241 ரூபாய் என்ற விலையிலும், தேசிய பங்குச் சந்தையில் சுமார் 7 சதவிகிதம் சரிந்து 241.50 ரூபாய் என்ற விலையிலும் வர்த்தகமாயின.