கல்கத்தா : இந்தியாவில் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்கள் செய்து வருகின்றன. நாட்டில் தற்போது வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் கலாச்சாரம் மற்றும் விலை குறைவான இண்டர்நெட் சேவைகளினால் மிக அதிகளவில் டிஜிட்டல் கலாச்சாரம் மக்களிடையே இருந்து வருகிறது. இதனாலேயே கட்சிகளிடையே ஆன்லைன் விளம்பரம் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து நடப்பு ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் அரசியல் கட்சிகளின் ஆன்லைன் விளம்பரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் மறுபக்கத்தை யாரும் அறிந்திருக்க முடியாது. கடந்த 2014- ஆம் ஆண்டை விட இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு மடங்காக இருக்கும் என்றும், இதன் மதிப்பு 400-500 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விளம்பரம் செய்வதில், பாரதிய ஜனதா கட்சி தான் முதலிடத்தில் உள்ளது என்றும், அதிலும் டிஜிட்டல் உலகில் விளம்பரங்களை செய்ய அதிகளவில் செலவு செய்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பல்வேறு மக்களை ஈர்க்க முடியும் என்பதை கட்சிகள் தீர்க்கமாக நம்புகின்றன. இந்த நம்பிக்கையின் எதிரொலியே இந்த விளம்பரங்களின் தாக்கம்.
விளம்பர செலவு ரூ.2500 - 3000 கோடி
தற்போதைய சூழலில் 2019-ம் ஆண்டுபொதுத் தேர்தல்களில் தேர்தல் பிரசாரங்களின் மொத்த விளம்பர செலவு சுமார் 2,500 - 3,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று டென்சுஸ் ஏஜிஸ் நெட்வொர்க்கின், கிரேட்டர் சவுத்தின் சி இஓ ஆஸிஷ் பாஸன் தெரிவித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் செய்யப்பட்ட விளம்பர செலவுகள் மட்டும் சுமார் 500 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரசாரத்திற்கான மனிதவளச் செலவையும் உள்ளடக்கியே இந்த செலவினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளன.
அரசு திட்டங்களுக்கு செலவு செய்யவில்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை அரசாங்க திட்டங்கள் குறித்தான விளம்பரங்களுக்கு இதுவரை எந்த செலவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட்போனின் விற்பனையிலும் தொலை தொடர்பு நிறுவனங்களின் விலை குறைவான இண்டர்நெட் பேக்குகளும் ஆன்லைன் பயன்பாட்டை அதிகரித்துள்ளன. இதனால் அரசியல் கட்சிகளும் இந்த மாதிரியான ஆன்லைன் விளம்பரம் செய்ய முன்வந்துள்ளன.
வாடிக்கையாளர்களை கவர பேஸ்புக் விளம்பரம்
தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும், பொதுமக்களை கவர்வதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தேர்வு செய்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்.
பேஸ்புக் நிறுவனத்திற்கு வருமானம்
இதனால் கட்சிகள் நன்மை அடைகின்றனவோ இல்லையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பெரும் லாபத்தை இதன் மூலம் சம்பாதித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் தேர்தலையொட்டி முகநூலில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களின் மூலம் அந்த நிறுவனம், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கு ரூ.10 கோடி வருமானம்
பேஸ்புக் இந்த வகையில் தேர்தல் விளம்பரங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வார விவரப்படி 41,974 விளம்பரங்கள் பகிரப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 8.58 கோடி ரூபாய் வருவாய் வந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 51,810 விளம்பரங்கள் மூலம், 10.32 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளம்பரத்தில் பாஜக தான் டாப்
இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில் தேர்தல் குறித்த விளம்பரங்களை பகிர்வதில் பாராதி ஜனதா கட்சியினர் முன்னணியில் இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை பா.ஜ.க வின் 3,700 விளம்பரங்கள் மூலம் 2.23 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த செலவு இவ்வளவா?
கூகுளின் அரசியல் விளம்பரம் வெளிப்படைத்தன்மை அறிக்கையின் படி பல்வேறு டிஜிட்டல் பிரிவுகளில் மொத்த செலவு பிப்ரவரி 19 முதல் ரூ. 86,311,600 கோடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக் இதே போன்ற அறிக்கையை வெளியிட்டது. அதில் 61,248 விளம்பரங்கள் மூலமாக ரூ. 121,845,456 ஆக செலவு செய்யப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளன. இருப்பினும் மா நிலங்களவையில் உள்ள தொகுதிக்கு ஏற்ற வகையில் விதவிதமான விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. இதன் செலவுகள் தனி என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.