டெல்லி: ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று தான் ஜெ பீ இன்ஃப்ராடெக் லிமிடெட். இந்த ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனம் பலரிடமும் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டது.
ஆனால் சொன்ன படி வீடுகளைக் கட்டிக் கொடுக்கவில்லை. மாறாக கொடுத்த பணத்தை செலவு செய்து அரையும் குறையுமாக எதையோ கட்டி இருக்கிறார்கள். இதற்கு நடுவில் ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனமே திவாலாகிவிட்டது.
ஜெ ஐ எல் - ஜெ பி இன்ஃப்ராடெக் கடந்த செப்டம்பர் 30, 2015 அன்று வாங்கிய கடன்களை திரும்பக் கொடுக்கவில்லை என லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் மார்ச் 31, 2016-ல்மற்ற ஏகப்பட்ட வங்கிகள் ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவன கடன்களை வாராக் கடன்களாக அறிவித்தார்கள்.
திவால் நடவடிக்கை
ஆகஸ்டு 2017-ல் ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஐடிபிஐ வங்கி முறையாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் புகார் செய்து ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனத்தை திவால் நிறுவனமாக அறிவித்து கொடுத்த கடன்களை திருப்பி வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
வாடிக்கையாளர்கள் புகார்
ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனத்துக்கு பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் மீது National Consumer Disputes Redressal Commission (NCDRC)-ல் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கில் ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனம் திவாலானாலும் அதன் தாய் நிறுவனமான ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் எங்களுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
தனிக் குழு
இதற்கு நடுவில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி கடனாளிகளுக்கு ஜெ பி இன்ஃப்ராடெக்கில் இருந்து பணத்தை பிரித்துக் கொடுக்க Interim Resolution Professional (IRP) அமைக்கப்பட்டது. யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என கணக்கிட்டு வருகிறார்களாம். இந்த நேரத்தில் தான் வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள், ஜெ ஐ எல் - ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மீதும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம்
அதெப்படி ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனம் மக்களிடம் வாங்கிய பணத்துக்கு ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பணத்தைக் கொடுக்க முடியும் என கொந்தளித்தது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ். NCDRC வீட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுத்தது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம்.
தாய் நிறுவனம் மீதும் வழக்கு தொடுக்கலாம்
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "ஜெ ஐ எல் - ஜெ பி இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் என்கிற ரீதியிலும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் தான் இந்த வீடுகளுக்கு மார்க்கெட்டிங் செய்து வாங்க வைத்திருக்கிறார்கள் என்கிற நிலையிலும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடுக்கலாம், நஷ்ட ஈடுகளைக் கேட்கலாம் என தீர்பளித்திருக்கிறது. அதோடு இரு தரப்பினர்களையும் தீர விசாரித்து தீர்பளிக்கும் படியும் NCDRC-க்கு வழி காட்டி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.