டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் சக்தி வாய்ந்த டாப் 100 மனிதர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டிருக்கிறார்.
அவரோடு LGBTQ சமூகத்தினர்களுக்காக போராடிய இரண்டு இந்திய வழக்கறிஞர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றத்தில் சட்டப் பிரிவு 377-ஐ ரத்து செய்ய வைத்த வழக்கறிஞர்கள் அருந்ததி கட்ஜு மற்றும் மேனகா குருசாமி ஆகியோரும் பட்டியலிடம் இடம் பிடித்திருக்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை ஏப்ரல் 17, 2019 அன்று வெளியான இந்த டைம்ஸ் பட்டியலில் டொனால்ட் ட்ரம்ப், கிரிஸ்துவ மத குருமார்களின் தலைவர் போப் ப்ரான்சிஸ், சீன தேசத்தின் நிரந்தர தலைவர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதர் இம்ரான் கான், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், இந்தோ அமெரிக்க காமெடியன் ஹசன் மின்ஹாஜ் என காரசாரமாக பட்டியல் நீள்கிறது.
முகேஷ் அம்பானியைப் பற்றி இந்தியாவின் மற்றொரு பெரிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டைம்ஸுக்காக எழுதி இருக்கிறார். முகேஷ் அம்பானி அவரின் தந்தையை விட எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்து வேலை செய்பவர். அதை தன்னுடைய ஒவ்வொரு புது தொழில் மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்களைக் கொண்டு வரும் போதும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 28 கோடி பேருக்கு மேல் வாடிக்கையாளர்களை கைப்பற்றி இருக்கிறது. அதுவும் விலை குறைந்த 4ஜி தொழில் நுட்பத்துடன் கைப்பற்றி இருக்கிறார்.
இதில் ஆச்சர்யப் பட என்ன இருக்கிறது என்றால் ரிலையன்ஸ் ஜியோ என்கிற ஒரு நிறுவனத்தின் மூலம், மொத்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், ஆச்சர்யப்படுத்தும் வகையில் பல புதிய பிரம்மாண்ட வியாபாரங்களை ஆள அனுமதி கொடுத்திருப்பது தான் என எழுதி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.