டெல்லி: தகவல் தொழில்நட்பத்துறையின் ஜாம்பவனான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் பொன்விழாவை கொண்டாடி வரும் இந்த நேரத்தில் தனது ஊழியர்களுக்கு கைக்கடிகாரத்தை மட்டும் கொடுத்த கையோடு திருப்தி அடைந்துள்ளது. போனஸ் கொடுக்கவிட்டாலும் பரவாயில்லை, வேறு நல்ல பரிசு பொருளாவது கொடுத்து இருக்கலாம் என்று ஊழியர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
அனவைரும் வீடு, நகை, கார் என பெரிதாக எதிர்பார்த்த நிலையில் சிறிய அளவில் மட்டும் பரிசுப் பொருளைக் கொடுத்ததால் அனைத்து ஊழியர்களும் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்
நினைவில் நிற்கும் வகையில் போனஸ் தொகையை எதிர்பார்த்த ஊழியர்களுக்கு தள்ளுபடி விலையில் கைக்கடிகாரத்தை கொடுத்தது மிகப் பெரிய நிறுவனத்திற்கு பொருத்தமாக இல்லை என்று சந்தை நோக்கர்களின் வாதமாக உள்ளது.
டிசிஎஸ் பொன் விழா
நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறையில் முதல் இடத்தில் உள்ள நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் கடந்த 1968ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 50 வயது முடிந்து 51ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
பங்குச்சந்தையில் மூலதனம்
பங்குச் சந்தையில் 8 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள ஒரே நிறுவனம் என்ற சாதனையும் வைத்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். இவ்வளவு பெருமையை கொண்டுள்ள டிசிஎஸ் நிறுவனம், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று பொன் விழா கொண்டாடிய நிலையில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என டிசிஎஸ் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் டிசிஎஸ் ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
போனஸ் ஊக்கத்தொகை
டிசிஎஸ் நிறுவன ஊழியர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்படக் காரணம், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும பெரிய அளவில் சாதனை படைத்தால் அதைக் கொண்டாடும் வகையில் போனஸ், ஊக்கத் தொகை மற்றும் சம்பள உயர்வு என ஊழியர்களுக்கு வாரி வழங்கி அவர்களை சந்தோசத்தில் திக்குமுக்காட வைப்பது வழக்கம்.
கற்பனைக் கோட்டை
டிசிஎஸ் ஊழியர்களும் அதை மனதில் வைத்துக்கொண்டு, டிசிஎஸ் நிர்வாகம் அறிவித்த சிறப்பு பரிசு என்ற வார்த்தையை நினைத்து மனதில் பெரிய கற்பனைக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிக சம்பளம் தரும் நிறுவனங்களில் முன்னணியில் இருப்பதும டிசிஎஸ் நிறுவனமே.
என்ன பரிசு
அதிக சம்பளம் தரும் நிறுவனம் என்ற காரணத்தினாலேயே இதன் ஊழியர்கள் அனைவரும், பெரிதாக நகை, வீடு, கார் அல்லது டாடா நிறுவன தயாரிப்புகளில் ஏதாவது ஒன்று பொன்விழா கொண்டாட்ட பரிசாகக் கிடைக்கும் என்று ஊழியர்கள் கற்பனையில் இருந்தனர். ஆனால் டிசிஎஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு பொன் விழா கொண்டாட்ட பரிசாக தன்னுடைய தயாரிப்பான டைட்டன் கைகடிகாரத்தை மட்டுமே வழங்கி அனைத்து ஊழியர்களின் கனவிலும் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது.
ரிஸ்ட் வாட்ச்
பொன்விழாக் கொண்டாட்ட பரிசு குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் அனுப்பிய இமெயில் செய்தியில் டிசிஎஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக உங்களுக்கு ஒரு நினைவு பரிசை அளிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கடிகாரம் உங்கள் கைகளில் தவழும்போது, நமது பயணம் குறித்து நினைவூட்டும், கூடவே எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கான உந்து சக்தியையும் உற்சாகத்தையும் அந்தக் கைக்கடிகாரம் நமக்கு அளிக்கும் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
ஏமற்றமா போச்சே
பெரிய அளவில் போனஸ் மற்றும் பரிசுப் பொருட்களை எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து ஊழீயர்களுக்கும் தலைமை செயல் அதிகாரியின் கைக்கடிகார பரிசு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக தெரிகிறது.
பெருமைப்படுகிறோம்
டிசிஎஸ் நிர்வாகத்தின் கைக்கடிகார பரிசு குறித்து பெயர் வெளியிட விரும்பாத சில ஊழியர்கள் கூறுகையில் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் 50 ஆண்டு பொன் விழாவை கொண்டாடுவது மிகப்பெரிய சாதனையே. நாங்கள் அதில் பணியாற்றுவது என்பது எங்களுக்கும் பெருமையயும் கர்வமும் கூட.
இப்படி ஏமாத்திட்டாங்களே
இந்தியாவின் நம்பர் 1 இடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களான எங்களை ஏமாற்றிவிட்டது. போனஸ் கொடுக்கவிட்டாலும் பரவாயில்லை, வேறு ஏதாவது நல்ல பரிசு பொருளாவது கொடுத்து இருக்கலாம். டாடா நிறுவனத்தின் பொருளையே பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் கூட தனிஷ்க் (Tanishq) Jewellery) தங்க பரிசு பொருளை தரக்கூடாதா என்ன என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.