டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் இந்தியாவில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
2016 -ம் ஆண்டு நவம்பர் 8- ம் தேதி இரவு 8 மணிக்கு திடீரென்று தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினால் விழிம்பு நிலை மக்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மறுநாள் திருமணம் போன்ற நிகழ்வுகளை வைத்திருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பல திருமணங்கள் நின்று போயின. மக்கள் தங்களது சொந்த பணத்தை எடுப்பதற்காக வங்கிகளின் வாசலிலும் ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட நெடு நேரம் காத்து கிடந்தனர். கூட்ட நெரிசலில் 100 க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.
50 நாட்களில் நிலைமை சீராகும் என மோடி கூறினார். பணத்திற்காக வங்கிகளின் வாசல்களில் மக்கள் தவம் கிடந்தது புலம்பியபோது எல்லையில் ராணுவம் பெரிய துன்பங்களை அனுபவிக்கும்போது நம்மால் இந்த சிறிய துன்பத்தை கூட தாங்க முடியாதா என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்து வந்தனர். நாட்டின் பிரதமர் மோடியோ கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அரசு எடுத்துள்ள சிறந்த நடவடிக்கை இது. மக்கள் சிரமங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களின் வேதனையை அலட்சியப் படுத்திப் பேசினார்.
இது மிக மோசமான நடவடிக்கை என்று நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் பண மதிப்பிழப்பு குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்டேட் வொர்கிங் ஆஃப் இந்தியா என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில் இருந்து தேவையான தரவுகளைப் பெற்று இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வேலை இழப்போரின் எண்ணிக்கை புயல் போல் அதிகரித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து அறிக்கையை தயாரித்த அமித் பசோல் கூறுகையில், " பணமதிப்பிழப்புக்குப் பின் வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது., படித்துமுடித்து கனவுகளுடன் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன.
தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பும் பலவீனமடைந்து வேலைஉருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவைதான் இதற்கு காரணம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டபின், நாட்டில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன்பின் முழுமையாக சீரான, இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏற்குறைய பணமதிப்பிழப்புக்குப்பின் 50லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் " என பசோல் தெரிவித்தார்.
இந்த அறிக்கையில்,குறிப்பிட்டுள்ளபடி
1. பெண்கள் மிகமோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
2. கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்
3. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து 35 வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையே வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.
4. நாடுமுழுவதும் அதிக அளவில் நன்கு படித்தவர்கள், இளைஞர்கள் இடையேயும் வேலையின்மை அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது