டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் "நரிமன் பாயிண்ட் டவர்" கட்டடம் மும்பையில் நரிமன் பாயிண்ட் என்கிற பகுதியில் இருக்கிறது.
இந்த கட்டடத்தை 1974-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு ஏர் இந்தியா நிறுவனத்தோடு 30 நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கின.
இப்போது இந்த கட்டடத்தில் குடியேற மத்திய ரிசர்வ் வங்கி துடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த 10 வருடங்களுக்கு கொடுக்க வேண்டிய் லீஸ் வாடகையை முன் கூட்டியே கொடுக்கவும் முன் வந்திருக்கிறது ஆர்பிஐ.
முயற்சி
ஆர்பிஐ-க்கு முன் லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ் போன்ற அரசு அமைப்புகள் ஏர் இந்தியாவின் நரிமன் பாயிண்ட் டவரை வாங்க 1300 கோடி ரூபாய் வரை விலை பேசினார்கள். ஆனால் ஏர் இந்தியா மசியவே இல்லை.
கட்டடத்தை விற்கலாம்
கடந்த டிசம்பர் 2018-ல் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற தேவையான முதலீடுகளை அரசு செய்ய முடியாத போது, ஏர் இந்தியா வைத்திருக்கும் சொத்துக்களை விற்று திரட்ட முடிவு செய்தது மத்திய அரசு. ஏர் இந்தியா நிறுவனத்தின் 74 சதவிகித பங்குகளை விற்ற பின்னும் தேவையான பணத்தை திரட்ட இந்த நரிமன் பாயிண்ட் டவர் கட்டடத்தை விற்க முன் வந்தது.
எதிர்ப்பு
ஆனால் ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளே அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார்கள். அரசு இந்த முடிவை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும் எனக் களம் இறங்கினார்கள். மற்றொரு பக்கம் எந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த கட்டடத்தை வாங்க முன் வரவில்லை.
நல்ல காரணம்
அதற்கு ஏர் இந்தியா நிறுவனம், போராட ஒரு நல்ல காரணம் இருந்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் நரிமன் டவர்ஸ் கட்டடம் மூலம் ஒரு ஆண்டுக்கு சுமார் 130 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது ஏர் இந்தியா. இதை இன்னும் சிறப்பாக நிர்வகித்தால் சுமார் 400 - 500 கோடி ரூபாய் வரை அசால்டாக வருமானம் ஈட்டலாம்.
விளம்பரம்
இதில் இன்னும் மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போல, டிஜிட்டல் மற்ரும் ஃப்ளெக்ஸ் விளம்பர அம்சங்களை எல்லாம் இந்த நரிமன் பாயிண்ட் டவர்ஸ் கட்டடத்தில் கொண்டு வந்தால் இன்னும் வருமானம் அதிகரிக்கும். இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் உபரி வருமானம் அதிகரிக்கும் என யோசனைகளை முன் வைக்கிறார்கள் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்.