உலக நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பிசாஸின் நிறுவனமான அமேசான், தற்போது வரை உலகின் டாப் இ காமர்ஸ் நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 4.5 லட்சம் பேருக்கு மேல் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்க பங்குச் சந்தையிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட (Market Capitalisation)நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக சேர் போட்டு உட்கார்ந்திருக்கிறது.
1994-ல் அமெரிக்காவில் செயல்படத் தொடங்கிய அமேஸான், கடந்த 2004-ம் ஆண்டு தான் சீனாவில் நுழைந்தது. உள்ளே புகுந்த உடனேயே சீனாவின் சில முன்னனி இ காமர்ஸ் புத்தக விற்பனை தளங்களுக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர் செக் எழுதினார். அப்படியே அமேஸான் கொடி படர விட்டார். ஏகப்பட்ட ஆஃபர்கள், தரமான பொருட்கள், இலவசங்களை அள்ளி விட்டு சீன சந்தையைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் சீனாவைச் சேர்ந்த அலிபாபா, அப்போதே அமேசானுக்கு போட்டியாக களம் இறங்கி தன் கைவரிசைகளைக் காட்டத் தொடங்கியது. அமேஸான் சர்வதேச பொருட்களை சீனர்களுக்கு கொடுத்தால், அலிபாபா உள்ளூர் பொருட்களை கையில் எடுத்தது. ஒரு கட்டத்தில் அமேஸானை விட குறைந்த விலையில் பொருட்களைக் கொடுக்க அலிபாபாவால் முடிந்தது. அமேஸானின் முதுகெலும்பு முறிந்தது.
முடியவில்லை
அமேஸானோ, அலிபாபா அளவுக்கு அடி வரைக்கும் இறங்கி வியாபாரம் செய்ய முடியவில்லை. சீனப் பணியாளர்கள், சீன தொழிலாளர் நலச் சட்டம், சீன ரியல் எஸ்டேட் என எல்லாமே அமேஸானுக்கு எதிராக அமைந்தது. சீன இ காமர்ஸ் சந்தையை அமேஸானோடு அலிபாபா மட்டும் இன்றி ஜேடி.காம் போன்ற அடுத்த கட்ட இ காமர்ஸ் நிறுவனங்களும் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தியாவைப் போல ஃப்ளிப்கார்ட், ஸ்நாப் டீல் அவ்வளவு தானே என சீனாவில் இல்லை. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு பெரிய இ காமர்ஸ் நிறுவனம் களம் இறங்கி இருந்தது.
வெளியேறுகிறோம்
இத்தனை பிரச்னைகளையும் மனதில் கொண்டு நன்றாக யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது அமேஸான். இத்தனை போட்டி நிறுவனங்கள், அமேஸானால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு சீன சட்ட திட்டங்கள், சீன ஊழியர்கள் பிரச்னை போன்ற காரணங்களால் அமேஸான் சீனாவில் இருந்து வெளியேறுகிறதாம். பற்றாக்குறைக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போர் வேறு அமேஸானின் பிசினஸ் நெருப்பில் அவாப்போது நீர் வார்த்துக் கொண்டே இருக்கிறதாம். அதனால் சரியாக வியாபாரம் பார்க்க முடியவில்லை. எனவே சீனாவில் இனி இ காமர்ஸ் வியாபாரம் பெரிதாகச் செய்யப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா போதும்
அமேஸான் தன்னுடைய இ காமர்ஸ் பிசினஸைத் தான் செய்யப் போவதில்லையே தவிர சீனாவில் அமேசான் வெப் சர்வீசஸ், கின்டில் போன்ற மற்ற சேவைகளை வழக்கம் போலத் தொடரப் போகிறதாம். சீனர்களுக்கு தேவைப்படும் வெளிநாட்டு தயாரிப்புகளை மட்டும் ஆன்லைன் வியாபாரத்தில் விற்கப் போகிறதாம். உலகின் அதிக மக்கள் (வாடிக்கையாளர்கள்) கொண்ட நாட்டில் இருந்து பின் வாங்குவதால், இனி அமேஸானின் கவனம் உலகின் அதிக மக்கள் தொகை (வாடிக்கையாளர்களைக்) கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் முழு கவனத்தையும் கொடுக்கப் போகிறதாம்.
ரிலையன்ஸ்
இந்தியாவில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அமேஸானுக்கு ஒத்து வருகிறதாம். அதனால் தன் இ காமர்ஸ் வர்த்தகத்தை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த வாய்ப்புகள் இருப்பதாக உணர்கிறார்களாம். எனவே அமேஸான் நிறுவனம், இந்தியாவை தன் விருப்ப நாடுகளில் முதல் இடத்தில் வைத்திருக்கிறார்களாம். கடந்த டிசம்பர் 2018-ல் தான் ஆன்லைன் வியாபாரிகள், இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி கொண்ட கொள்கைகளை அறிவித்தது மத்திய அரசு. ஆனால் இந்த சூழலைக் கூட ஏற்றுக் கொண்டு வியாபாரம் செய்யத் துணிந்திருக்கிறது அமேஸான். ஆனால் ரிலையன்ஸோ இந்தியா இந்தியர்களுக்கே, இந்திய சந்தைகள் எனக்கே என முழங்கிக் கொண்டிருக்கிறது. அமேஸானை அனுமதிக்குமா ரிலையன்ஸ்.