டெல்லி: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் நிறுவனத்தை எப்படி இயக்குவது என தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ. அதே நேரத்தில் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ.
இதைக் குறித்து தேசிய விமானிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கேப்டன் அசிம் வலியானி "ஒவ்வொரு நாளும் சூழல் மோசமடைந்து கொண்டே போகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களின் அன்றாட வாழ்கைத் தேவைகளை, தினப் படிச் செலவுகளைக் கூட சரி வர செய்து கொள்ள முடியவில்லை என செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.
கடந்த வாரத்தில் ஒரு விமானி தான் ஆசைய் ஆசையாக வாங்கிய ஒரு ரேஸ் பைக்கை வந்த விலைக்கு விற்று இருக்கிறாராம். அந்த பணத்தில் தான் அவருக்கும், அவர் குடும்பத்துக்குமான அன்றாட தேவைகளையே செய்து கொள்ள முடிந்ததாம்.
பணி மாற்றம்
சில வாரங்களூக்கு முன்பு ஒரு டெக்னிக்கல் பணியாளர் ஒருவரை டெல்லியில் இருந்து மும்பைக்கு பணிமாற்றம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்த விமானமும் கிடைக்கவில்லை. ரயில் டிக்கெட் கூட கிடைக்காமல் சிரமப் பட்டிருக்கிறார். அவருக்கு தன் வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.
மகன் இறப்பு
கடந்த மார்ச் 2019-ல் ஒரு ஜெட் ஏர்வேஸ் ஊழியரின் மகனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பலரிடமும் பணம் கேட்டிருக்கிறார். ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவி இருக்கிறார்கள். ஆனாலும் சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே போனதால் மகனைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாம். மகன் இறந்துவிட்டான்.
குறைந்த சம்பளதாரர்கள்
இப்படி மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு வித பிரச்னை என்றால், மாதம் 30,000 40,000 மட்டுமே சம்பளமாக, கமிஷனாக வாங்குபவர்களின் கையில் சேமிப்பு என்ற ஒன்றே கிடையாது. இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்திலேயே தீர்ந்திருக்கும். அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது எனவும் சொல்கிறார்கள் Jet Airways ஊழியர்கள்.
எப்படியும் விற்று விடுவோம்
ஆனால் Jet Airways நிர்வாகத்தின் தலைவராக இருக்கும் எஸ்பிஐ-யோ விரைவில் Jet Airways நிறுவனப் பங்குகள் நல்ல விலைக்கு விற்கப்படும் எனச் சொல்லி கொண்டிருக்கிறார்கள். TPG Capital, Indigo Partners, National Investment and Infrastructure Fund (NIIF), Etihad Airways போன்ற நிறுவனங்கள் இப்போது வரை Jet airways பங்குகளை வாங்கும் பந்தயத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.