மும்பை: ஜெட் ஏர்வேஸின் போதாத காலம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று (ஏப்ரல் 11, 2019) கிழக்கு இந்தியாவில் இருந்தும், இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் இருந்தும் பறக்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்கவில்லையாம். இனி பற்க்கப் போவதில்லையாம்.
அதாவது இனி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் கொல்கத்தா, பாட்னா, கெளவுஹாத்தி போன்ற இந்தியாவின் கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்திய நகரங்களுக்கு செல்லவோ, அந்த நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கோ ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் பயணிக்கஒவோ முடியாது.
அதோடு நேற்று சில சர்வதேச வழித் தடங்களில் பறக்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் பறக்கவில்லையாம். ஏன் பறக்கவில்லை..? என்ன காரணம்..? என விசாரித்தால் வழக்கமான காரணங்கள் தானாம்.
இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மற்றொரு பிரச்னையும் கண் முன் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அது விமான பயணிகளுக்கான பேமெண்ட் பாக்கி. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட விமானங்களை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை ரத்து செய்ததற்காக விமானப் பயணிகள் செலுத்திய அவர்களின் பயணக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமே அந்த பாக்கி தான். இப்படி ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்களின் பயணிகளுக்கு மட்டும் சுமார் 3,500 கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம்.
இப்போது ஜெட் ஏர்வேஸின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால், ஜெட் ஏர்வேஸை நம்பி விமானப் பயணங்களுக்கு தயார் ஆனவர்கள் இப்போது கடைசி நேரத்தில் வேறு சில விமான நிறுவனங்களில் மீண்டும் பயணச் சீட்டு புக் செய்ய வேண்டி பிரச்னையை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
உதாரணத்துக்கு சென்னை டூ டெல்லிக்கு முதலில் 5000 ரூபாய் செலுத்தி ஜெட் ஏர்வேஸில் புக் செய்திருந்தால் அதற்கு ரீஃபண்டாக வெறும் 3500 ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயமாக இருக்கிறதாம். ஏற்கனவே 1500 ரூபாய் நஷ்டம். இப்போது மீண்டும் அதே சென்னை டூ டெல்லிக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டி இருக்கிறதாம்.
எப்போதும் விமான டிக்கெட்டுகளின் விலை டைனமிக் பிரைசிங் முறையில் நிர்ணயிக்கப்படும். பயண தேதி நெருங்க நெருங்க விமான பயணச் சீட்டுகளின் விலை அதிகரித்துக் கொண்டே போகும். அப்படி ஒரு மாதம் முன்பே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் செய்ய புக் செய்து வைத்திருந்த டிக்கெட்டுகள் இப்போது மொத்தமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது,
வரும் ஏப்ரல் 25, 2019 அன்று பயணம் செய்ய, ஒரு மாதம் முன்பு 10,000 ரூபாய்க்கு முன் பதிவு செய்த விமான பயணச் சீட்டுகளின் விலை இப்போது சுமாராக 25,000 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதோடு ஒவ்வொரு இந்திய விமானப் பயண வழித் தடங்களிலும் போதுமான விமானங்கள் இல்லாததால் இருக்கும் விமானங்களிலேயே பயணச் சீட்டுகளுக்கான விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.