டெல்லி : அடடா இது நல்ல பிசினஸ்ஷா ஆக இருக்கே. இதுல இவ்வளவு லாபம் இருக்கும்னு தெரிஞ்சா பேசாமா இப்படியொரு தொழில ஆரம்பிச்சிட்டு ஒரு தேர்தல்ல கமிஷன் கிடைச்சா கூட போதும் போல இருக்கே. அப்படியென்ன பிசினஸ்னு கேட்கிறீங்களா? நடந்து கொண்டிருக்கும் முடிந்த தேர்தல்களுக்காக நிதிகள் வசூல் செய்ததில் பி.ஜே.பி தான் டாப். அதுவும் தேர்தல் நிதிப்பத்திரங்கள் அறிமுகப்பட்டதில் இருந்து அதில் பெரும்பகுதி நிதி பாஜகவுக்கே சென்றுள்ளது.
அதிலும் கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் நிதியாக பெற்றதில் ரூ.221 கோடியில் இருந்து ரூ.210 கோடியை பாஜக மட்டுமே பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் காங்கிரஸ் கட்சியும், மற்ற கட்சிகளும் மீதமுள்ள நிதியை தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாகப் பெற்றுள்ளன. அதேசமயம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் முறை கொண்டுவந்த பின், நன்கொடை அளிப்பது மிக குறைந்துவிட்டது.
குறிப்பாக காங்கிரஸ்காக 5 கோடி ரூபாய் நிதியாக கிடைத்துள்ளது. இதுவே மற்ற கட்சிகளுக்கு 6 கோடி ரூபாய் நிதியுதவியும் கிடைத்துள்ளது. 222 கோடி ரூபாய் மதிப்புள்ள 511 தேர்தல் பத்திரங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் நிதிப்பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக வழங்குபவர்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அதற்கு மேல் அதிகமாக வழங்குபவர்கள், தேர்தல் நிதிப்பத்திரங்களை வங்கியில் பெற்று வங்கி மூலம் வழங்கலாம்.
பணம் நன் கொடையாக அளிப்பது குறைந்துள்ளது
தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவோர் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் அறிவிதிருந்தது. இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளும் தங்களின் ஆண்டு நிதி அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. இதில் உள்ள விவரங்களைப் ஆய்வு செய்யப்பட்டதில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை பணமாக வழங்குவது வெகுவாக குறைந்துள்ளது.
பெயர் வெளியிடாமல் நிதி அதிகரித்துள்ளது
அதேசமயம் பெயர் வெளியிடாமல் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கும் அதாவது, ரூ.20,000 அதிகமாக தேர்தல் நிதிப்பத்திரங்களில் நிதி அளிப்பது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 2017- 2018 ஆம் நிதியாண்டில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.221 கோடி நிதியை வங்கியில் இருந்து பெற்றுள்ளன. அதில் ரூ.210 கோடியை பாஜக மட்டுமே பெற்றுள்ளது. மீத தொகையில் காங்கிரஸ் கட்சி ரூ.5 கோடியும், பிற கட்சிகள் ரூ.6 கோடியும் பெற்றுள்ளன.
பாஜாகவுக்கு ரூ.990 கோடி
கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் நிதிப்பத்திரங்கள், நன்கொடை வசூல் ஆகியவை மூலம் 990 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.142.80 கோடியும் கிடைத்துள்ளது. இதுவே கடந்த 2016 - 2017 ஆம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக நன்கொடை பெற்றதில் பாஜக 66.34 சதவிகிதம் பெற்ற நிலையில்,இது 2017- 2018 ஆம் ஆண்டில் பாஜகவின் 73.49 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதிலும் பாஜக தான் டாப்
பாஜக அளித்துள்ள விவரங்கள்படி, ஒட்டுமொத்த நன்கொடையில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக 44 சதவிகிதம் பேர் அளித்துள்ளனர். அதாவது 438 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக 21.2 சதவிகிதமும், அதாவது ரூ.210 கோடி மீதமுள்ள 35 சதவிகிதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக நன்கொடையாகவும் கிடைக்கப் பெற்றுள்ளன.
பாஜகாவுக்கு ரொக்க நிதியுதவி குறைந்தது
இதுவே கடந்த 2016 -2017 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு நன்கொடைகள் மூலம் 55.06 சதவிகிதமும், தேர்தல் நிதிப்பத்திரங்கள் அப்போது இல்லை எனினும் 20,000 ரூபாய்க்கும் குறைவாக 47 சதவிகிதம் பேரும் நிதியுதவி அளித்துள்ளனர். ஆனால், 2016-17 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், ரொக்கமாக பாஜகவுக்கு கிடைக்கும் நன்கொடை அளவு 45 சதவிகிதத்திலிருந்து, 35 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பெயரை வெளியிட்டு நன்கொடை வழங்குவோர எண்ணிக்கையும் 44.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 53 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்க்கு 2-வது இடமே
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நிதி பங்கீட்டில் இரண்டாவது இடமே. கடந்த 2017-18 ஆம் ஆண்டில், மொத்தமாக 142 கோடி ரூபாய் நன்கொடையே கிடைத்துள்ளது. இதில் 18.7 சதவிகிதம், 26.65 கோடி ரூபாய் நன்கொடை பங்களிப்பாளர்கள் மூலமாகவும், மேலும் 3.5 சதவிகிதம் அதாவது 5 கோடி ரூபாய் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமும், 20,000 க்கும் குறைவான நிதியுதவிகள் 77.71 சதவிகிதமும் கிடைத்துள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு நிதி குறைந்தது
இதுவே கடந்த 2016-17 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக 25.2 சதவிகிதமும், 20,000 ரூபாய்க்கும் குறைவாக 74.8 சதவிகிதமும் கிடைத்தது. அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு பெயரை வெளிப்படையாகத் தெரிவித்து நிதியளிப்பவர்கள் எண்ணிக்கையும் 6.5 சதவிகிதம் குறைந்தது. அதேசமயம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது 3.5 சதவிகிதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நிதிப்பத்திரங்களை எஸ்.பி.ஐ மட்டுமே வெளியிடுகிறது
அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் நிதிப்பத்திரங்களை இதுவரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மட்டுமே வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் இந்த வங்கியின் தேர்தல் நிதிப்பத்திரங்கள் அளவு சற்று அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக கடந்த அக்டோபர் முதல் நவம்பர் வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, 1056 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதிப்பத்திரங்களை விற்பனை செய்துள்ளது கவனிக்க தக்கது.
அதிக மதிப்பிலான நிதிபத்திரங்கள் விற்பனை அதிகம்
குறைந்த மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்களுக்கு(ரூ.1000 முதல் ரூ.10000) தேவையும் அதிகமாக இல்லை. ஆனால், அதிக மதிப்பு கொண்ட 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான பத்திரங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 94 சதவிகிதம் இவ்வகையான நிதி பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்த தொகையில் 99 சதவிகிதம் அதிக மதிப்பிலான பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.
எஸ்பிஐ-க்கு நல்ல காலமே
எஸ்.பி.ஐ க்கு இது நல்ல காலமே. எப்படின்னு கேட்கிறீங்களா? கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை எஸ்பிஐ வங்கி 1716 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எப்படியோ வங்கிக்கு வருமானம் வந்தா சரிதானே.