மும்பை: பயணிகள் விமான சேவை இயக்குநரகம் (Director General of Civil Aviation), மார்ச் 2019-ல் விமானங்களில் பயணம் மேற் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் 11 உள் நாட்டு விமான சேவை நிறுவனங்களின் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தரவுகளைத் தயார் செய்திருக்கிறார்களாம்.
மார்ச் 2019-ல் 11.59 மில்லியன் பயணிகள் விமானங்களில் தங்கள் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கடந்த மார்ச் 2018-ல் 11.58 மில்லியன் பயணிகள் விமானங்களில் பயணம் செய்திருக்கிறார்களாம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்கச் சதவிகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் முதல்முறையாக கடந்த ஜனவரி 2019-ல் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி ஒற்றை இலக்க சதவிகிதங்களில் உயரத் தொடங்கியது.
எத்தனை பேர்
ஜனவரி 2018-ஐ விட ஜனவரி 2019-ல் 9.1% பயணிகள் கூடுதலாக விமானப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் பிப்ரவரி 2018-ஐ விட பிப்ரவரி 2018-ல் வெறும் 5.62% பயணிகள் தான் தங்கள் பயணங்களை விமானங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த மார்ச் 2018-ஐ விட மார்ச் 2019-ல் வேறுபாடே இல்லாத அளவுக்கு வெறும் 0.08 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நிதி நெருக்கடியால் செயல்பட முடியாமல் இருப்பது தான் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் பயணிகள் விமான சேவை இயக்குநரகம்.
5.37 சதவிகிதம்
சில ஆண்டுகள் முன்பு வரை, இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமாக வளம் வந்து கொண்டிருந்தது. கடந்த மார்ச் 2018-ல் சுமார் 15 லட்சம் விமானப் பயணிகளுக்கு சேவை வழங்கிய ஜெட் ஏர்வேஸ் மார்ச் 2019-ல் வெறும் 6.71 லட்சம் பயணிகளுக்கு மட்டுமே தன் சேவையை வழங்கி இருக்கிறது. இன்னமும் மொத்த இந்திய விமானப் பயணிகள் சந்தையில் 5.37 சதவிகித பயணிகளை தன் கையில் வைத்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ்.
இண்டிகோ
இந்திய விமானப் பயணிகளை அதிகம் தன் கைவசம் வைத்திருக்கும் நிறுவனமாக இண்டிகோ அதே முதலிடத்தில் இருக்கிறது. மார்ச் 2019-ல் இண்டிகோ நிறுவனம் 54 லட்சம் விமான பயணிகளுக்கு தன் சேவையை வழங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த விமானப் பயணிகள் சந்தையில் இது 46.9 சதவிகிதம். மார்ச் 2019-ல் இரண்டாவது இடத்தில் ஸ்பைஸ் ஜெட் 15.7 லட்சம் பேருக்கு தன் சேவையை வழங்கி 13.6 சதவிகித விமானப் பயணிகள் சந்தையை தன் கைவசம் வைத்திருக்கிறது.
seat occupancy
ஒரு விமானத்தில் 100 இருக்கைகள் இருக்கிறது என்றால் அதில் எத்தனை இருக்கைகள் நிரம்புகிறது என ஒரு கணக்கு பார்ப்பார்கள். அதை ஆங்கிலத்தில் seat occupancy என்பார்கள். இந்த seat occupancy கணக்கில் இந்திய விமான நிறுவனங்களில், ஸ்பைஸ் ஜெட் முதலிடத்தைப் பிடித்திருக்கிறதாம். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் எப்போதும் 100-க்கு 91 இருக்கைகள் நிரம்பி விடுகிறதாம்.
நேரம் தவறாமை
இந்திய விமான சேவை நிறுவனங்களிலேயே ஒழுங்காக நேரத்துக்கு (Punctuality) விமானங்களை இயக்குவது மற்றும் விமானங்களை ரத்து செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்களில், Go Air முதலிடம் பிடித்திருக்கிறது. இவர்கள் 100 விமானங்களை இயக்குகிறார்கள் என்றால் 95 விமானங்களை சொன்ன நேரத்தில் ஒரு நொடி கூட தாமதிக்காமல் இயக்குகிறார்களாம்.
ஒழுங்கீனமான நிறுவனம்
இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, Go Air, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்றவைகளுக்கு அப்படியே ரிவர்ஸ். ஒழுங்கீனமான நிறுவனங்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதாவது அதிக விமானங்களை ரத்து செய்வது, சொன்ன நேரத்தில் விமானங்களை இயக்காமல் இருப்பதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறதாம். இதையும் அரசு அமைப்பான பயணிகள் விமான சேவை இயக்குநரகமே (Director General of Civil Aviation) தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது.