டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும், இது கடந்த 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்றும் இபிஃப்ஓ எனப்படும் தொழிலாளர் சேமநலநிதி அமைப்பின் மாதாந்திர சம்பள தரவு அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன என்று வேலைவாய்ப்பு பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ள நிலையில் இபிஃப்ஓ வேலை வாய்ப்பு கூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டிவரும் பிரச்சாரம் செய்யும் இந்த நேரத்தில் பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, ஆளும் பாஜகவுக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது.
எதிர்கட்சிகள் தாக்கு
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேலை வாய்ப்புகள் கடுமையாக குறைந்ததுள்ளது என்றும், இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத சரிவு என்றும் தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு லோக்சபா தேர்தலை ஒட்டி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு
எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை அடுக்கிய நேரத்தில், இபிஃப்ஓ அமைப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக வக்காலத்து வாங்கியது. இந்த நேரத்தில் முன்னால் ஆர்பிஐ ஆளுநரான ரகுராம் ராஜன், கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு கடுமையாக சரிந்துள்ளதாக குற்றம் சாட்டியதோடு நில்லாமல் மத்திய அரசு தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரமிது என்று கொளுத்திப்போட்டார்.
பிப்ரவரியில் 3 மடங்கு அதிகரிப்பு
அனைத்து தரப்பினரும் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 7.2 சதவிகிதம் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் வைத்தாலும், மத்திய தொழிலாளர் சேமநல நிதி அமைப்பான இபிஃப்ஓ (EPFO) அதை மறுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்பானது 3 மடங்கு கூடியுள்ளதாக நிறுவனங்கள் வழங்கும் மாதந்திர சம்பள தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது.
80.86 லட்சம் புதிய வாய்ப்புகள்
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையலான 18 மாதங்களில் சுமார் 80.86 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டுமே 2.36 லட்சம் வேலை வாய்ப்புகள் 22 முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இபிஃப்ஓ தெரிவித்துள்ளது.
எல்லோரும் வாலிப வயசு
கடந்த பிப்ரவரி மாதத்தில் 18 முதல் 21 வயது உள்ளவர்களுக்காக 2.09 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடும்போது அதைவிட சுமார் 3 மடங்கும் அதிகம் எனவும் இபிஎஃப்ஓ (EPFO) அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 2.87 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரியில் ரொம்ப கம்மிதான்
இபிஃப்ஓ வெளியிட்டுள்ள சம்பள தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் 8.94 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய கணிப்பை விட சுமார் 2 ஆயிரம் குறைவு என்றம் குறிப்பிட்டுள்ளது. அதே போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.96 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது 8.61 லட்சமாக குறைந்துள்ளது.
மொத்தத்தில் 72.24 லட்சம் தான்
ஒட்டு மொத்தமாக கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடப்பு 2019ஆம் ஆண்டு ஜனவரி வரை உள்ள காலத்தில் 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இருக்கக்கூடும் என்று கடந்த மார்ச் மாதத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அது 4.24 லட்சம் குறைந்து 72.24 லட்சம் சந்தாதாரர்களாக குறைந்துள்ளது.