டெல்லி: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் நிறுவனத்தை எப்படி இயக்குவது என தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ. அதே நேரத்தில் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதன் பின் சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி இருப்பதால் எரிபொருள் நிரப்பப்படாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முகத்தைக் காட்டியது, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்தாதது, விமானங்களுக்கான குத்தகைத் தொகை திருப்பிச் செலுத்தாதது எனப் பட்டியல் நீள்கிறது.
வாடிக்கையாளர்கள் பிரச்னை
இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மற்றொரு பிரச்னையும் கண் முன் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அது விமான பயணிகளுக்கான பேமெண்ட் பாக்கி. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட விமானங்களை இயக்க முடியாமல் ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ். விமான சேவையை ரத்து செய்த பின் விமானப் பயணிகள் செலுத்திய அவர்களின் பயணக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமே, அந்த பாக்கி தொகை தான். இப்படி ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்களின் பயணிகளுக்கு மட்டும் சுமார் 3,500 கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில்
சமூக செயற்பாட்டாளர் பிஜான் குமார் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார். கடந்த சில மாதங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் பல லட்சம் விமான பயணிகளின் பயணச் சீட்டுக் கட்டணம் சுமாராக 3500 கோடி ரூபாய் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடமே இருக்கிறது. அதோடு மாற்று விமானப் பயணச் சீட்டுகளை வாங்கும் போது, ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து மடங்கு வரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் ஜெட் ஏர்வேஸில் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்தவர்கள் மிகுந்த மன வலியில் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் பிஜான் குமார்.
விமானம் தயார் செய்
இதுவரை ஜெட் ஏர்வேஸில் பயணச் சீட்டுகளைப் பதிவு செய்து ரத்தானவர்களுக்கு முறையாக நஷ்ட ஈடும், தங்களின் விமான பயணச் சீட்டு கட்டணங்களும் திரும்ப வழங்கப்பட வேண்டும். இனி பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு முறையாக மாற்று விமானங்களை தயார் செய்து கொடுக்க வேண்டும் அல்லது உரிய நஷ்ட ஈடுகளைக் கொடுக்க வேண்டும் என வழக்கில் சொல்லி இருக்கிறார்கள். டெல்லி உயர் நீதிமன்றம் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றச் சொல்லி விமானப் பயணிகள் இயக்குநரகம் மற்றும் விமானப் பயணிகள் அமைச்சகத்துக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் வழக்கிலேயே சொல்லி இருக்கிறாராம்.
மே 10, 2019
கடந்த மார்ச் 2019-ல் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் கட்டாயத்தின் பெயரில் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அதன் பின் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன்கொடுத்த 26 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சார்பாக எஸ்பிஐ தான் ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது. வரும் மே 10, 2019-க்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிகலாம். எப்படியும் ஜெட் ஏர்வேஸ் விற்கப்பட்டு தங்கள் கடன் தீரும் எனக் காத்திருக்கிறது எஸ்பிஐ.