சென்செக்ஸ் தற்போது (மதியம் 2.15) 38,785 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி50 (மதியம் 2.15) 11,633 -ல் வர்த்தகமாகி வருகிறது. அதிக சிரமங்களுக்குப் பின் சென்செக்ஸ் தன் 39,000 என்கிற மாய எண்ணைக் கடந்து இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.
வெறும் மூன்றே மூன்று முறை தான் சென்செக்ஸ் தன் மாய எண்ணான 39,000 புள்ளிகளையும், நிஃப்டி தன் மாய எண்ணான 11,700 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
ஏன் 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஏன் நிஃப்டி தன் மாய எண்ணான 11,700-க்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை..? இதற்கான விடையை ஏப்ரல் 15, 2019 அன்றே சொல்லி இருந்தோம்.
39,000 மாய எண்
சென்செக்ஸ் வரலாற்றில் 39,000 புள்ளிகளுக்கு மேல் இதுவரை மூன்று முறை மட்டுமே வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. எனவே இனி வரும் நாட்களில் இந்த மாய எண் 39,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து முதலில் ஏற்றத்துக்கு வலு சேர்க்கட்டும். அதன் பின் வலுவான ஏற்றத்தைப் பற்றி யோசிக்கலாம். ஆக இன்னமும் கூட 39,000 என்பது ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸ் தான். என ஏப்ரல் 15, 2019 குளோசிங் பெல் செய்திகளில் சொல்லி இருந்தோம்.
11,700 மாய எண்
சென்செக்ஸ் எப்படி 39000 புள்ளிகளில் சிக்கிக் கொண்டிருக்கிறதோ, அதே போல நிஃப்டி இந்த 11,700-ல் சிக்கித் தவிக்கிறது. இதுவரை நிஃப்டியின் வரலாற்றில் 3 முறை தான் 11,700 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் இது போலவே 11700 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இந்த 11,700-ஐ ஒரு வலுவான சப்போர்ட் புள்ளியாக மாற்ற வேண்டும் என ஏப்ரல் 15, 2019-ல் சொல்லி இருந்தோம். சரி நம் பங்குச் சந்தைகளை இந்த மாய எண்களுக்குள்ளேயே இழுத்துப் பிடிக்கும், அந்த 5 ஜென்ம சனிகளைப் பார்த்துவிடலாமா..?
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை மீண்டும் ராக்கெட் வேகம் எடுத்திருக்கிறது. அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடை முழுமையாக வரும் மே 2019-ல் இருந்து அமலுக்கு வரப் போவதால் கச்சா எண்ணெ விலை, இப்போதே கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமாராக 73.5 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இதனால் இந்திய அரசின் கஜானாவுக்கு பலத்த செலவு அதிகரிக்கும். இந்திய அரசின் செலவீனங்கள் சந்தையில் பிரதிபலிப்பதால், சென்செக்ஸ் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளும் சரி, 2018 - 19 நிதி ஆண்டுக்கான முடிவுகளும் சரி நன்றாகவே வந்திருக்கிறது. ஆனால் பல்வேறு தரகர்களும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யச் சொல்லாமல் முதலீடு செய்தவைகளை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது விற்று வெளியேருங்கள், வந்த வரைக்கும் இருக்கும் லாபத்தை எடுத்துக் கொண்டு விற்றுவிடுங்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் ஜியோ. ஜியோவுக்கு கோடி கணக்கில் முதலீடு செய்து மிகக் குறைந்த வருமானமே ரிலையன்ஸ் ஈட்டுகிறதாம். சென்செக்ஸ் 30 பங்குகளில் அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்கு ரிலையன்ஸ் தான். ஆக ரிலையன்ஸ் விலை சரிந்தால், தானாகவே சென்செக்ஸும் சரியும். சரிந்து கொண்டிருக்கிறது.
ஆர்பிஐ கணிப்பு
இந்தியாவில் முதலீட்டுக்கான தேவை குறைந்து வருவது, ஏற்றுமதி குறைந்து வருவது, பணவீக்கமும் நிர்ணயித்த இலக்குக்கு குறைவாக இருப்பது எல்லாமே உடனடியாக பதிலளிக்க வேண்டிய பொருளாதாரப் பிரச்னைகள் எனச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ். இந்த ஒரு செய்தி சந்தையின் செண்டிமெண்டையே மொத்தமாக நெகட்டிவ்வாக மாற்றி விட்டது. அதனால் தான் இந்த மந்த நிலை.
நிஃப்டி வங்கி
இந்தியாவின் இரண்டு பங்குச் சந்தைகளின் இண்டெக்ஸ்களிலும் நிதி மற்றும் வங்கிகள் சார்ந்த பங்குகளுக்கு அதிக வெயிட்டேஜ் இருக்கிறது. சென்செக்ஸில் சுமார் 43%-க்கு மேலும், நிஃப்டி 50 இண்டெக்ஸில் 38.85 சதவிகிதமும் இந்த நிதி மற்றும் வங்கிகள் துறை தான் இருக்கிறது. ஆக இந்த துறை சார்ந்த பங்குகள் சரிந்தால் மொத்த சந்தையும் சரியும். இன்று காலை யெஸ் பேங்க், இண்டஸ் இந்த் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஃபெடரல் பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் என பல்வேறு முக்கிய வங்கிகளின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கியதும் சென்செக்ஸும், நிஃப்டியும் தங்களின் மாய எண்களுக்குக் கீழ் வர்த்தகமாக முக்கிய காரணம்.
டெக்னிக்கல்
ஏப்ரல் 18, 2019 அன்று நிஃப்டி 11,786-ஐ தொட்டு கிடுகிடு வென இறங்கி 11750-க்கு வந்துவிட்டது. ஆக ஏற்றத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை. எனவே நிஃப்டி50-ன் ட்டெய்லி சார்ட்டில் ஒரு Dark cloud Pattern உருவாகி இருக்கிறது. எனவே நிஃப்டி 11856-ஐ கடந்து வர்த்தகமாகவில்லை என்றால் மேலும் சரியத் தான் செய்யும் என்கிறார்கள் அன்லிஸ்டுகள்.