டெல்லி: இந்தியாவில் உணவுத் தரத்தை நிர்ணயிக்கும், நெறிமுறைப்படுத்தும் FSSAI - Food Safety and Standards Authority of India அமைப்பு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கான தடையை மீண்டும் நீட்டித்திருக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கு தடை விதித்தது நம் FSSAI - Food Safety and Standards Authority License அமைப்பு.
அந்த தடை ஒவ்வொரு முறையும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. சமீபத்தில் ஏப்ரல் 23, 2019 உடன் சீன பால் பொருட்கள் மீது விதித்திருந்த தடை காலாவதி ஆகிறது. இப்போது மீண்டும் சீன பால் பொருட்களுக்கான தடையை நீட்டித்திருக்கிறது.
சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள், சாக்லேட்டுகள், சாக்லேட் சம்பந்தப்பட்ட பொருட்கள், பால் சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள், பாலாடைக்கட்டிகள், என பால் சம்பந்தப்பட்ட அல்லது பால் சேர்க்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் இந்தியாவில் இறக்குமதி செய்ய தடையை நீட்டித்திருக்கிறது இந்தியா.
சீனா ஏற்றுமதி செய்து இந்தியாவில் எந்த நகரங்களில் எல்லாம் இறக்குமதி செய்யப்படுகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் மெலமைன் (Melamine) என்கிற ரசாயனத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய வசதிகள் அமைக்கப்பட வேண்டுமாம்.
அதுவரை சீனாவிடம் இருந்து எந்த ஒரு பால் சம்பந்தப்பட்ட பொருட்களும் இறக்குமதி செய்யப்படாதாம். சுருக்கமாக சீன பால் பொருட்கள் எந்த வாயிலாக இந்தியாவுக்குள் நுழைகிறதோ அந்த இடங்களில் எல்லாம் பொருட்களில் மெலமைன் (Melamine) ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனைச் சாலைகள் கட்டமைக்கப்பட வேண்டுமாம். அதன் பின் தான் சீன பால் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியுமாம்.
இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் உலகிலேயே மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் இந்தியா தான், ஆனால் இந்தியா அதையும் தாண்டி கொஞ்சம் பாலை இறக்குமதி செய்கிறது. பால் சம்பந்தபட்ட பாலாடைக் கட்டிகள், பால் சாக்லேட்டுகள், பால் பவுடர்கள், பால் இனிப்பான்கள் என பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்துக் கொள்ளாமல் இறக்குமதி செய்கிறது.