பெங்களூரூ: இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற போதிலும், நாடு முழுக்க வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கின்ற இந்த நேரத்திலும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் சுமார் 53,000 பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம்.
இந்த 53,000 பேரும் கடந்த 2018 - 19 நிதி ஆண்டிலேயே வேலைக்கு எடுத்திருக்கிறார்கள், இந்த செய்தி தேர்தல் நடக்கின்ற பொழுது வெளியில் வந்திருக்கிறது என்பது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் மென் பொருள் துறையில் இயங்கி வரும் நம்பர் 1 ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 29,287 பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். 2017 - 18 நிதி ஆண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 7,775 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தது.
இன்ஃபோசிஸ்
பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவின் மென் பொருள் துறையில் இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 24,016 பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். 2017 - 18 நிதி ஆண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 3,743 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தது.
53,303 பேர்
மொத்தம் 53,303 பணியாளர்களை கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் ஒரே வருடத்தில் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய நிதி ஆண்டான 2017 - 18 நிதி ஆண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் என இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து 11,500 பணியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுத்திருந்தார்களாம். ஆக 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் 363 சதவிகிதம் அதிகப் பணியிடங்களை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும், இன்ஃபோசிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.
2 லட்சம் பேர்
தற்போது மொத்த இந்திய மென் பொருள் துறையின் மதிப்பு, சுமார் 167 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக Fortune என்கிற ஆங்கிலப் பத்திரிகை கணித்திருக்கிறது. இந்த 2019-ம் வருடத்தில் இந்திய மென் பொருள் துறையில் data science, data analysis, solution architects, product management, digital marketing, Machine Learning and Artificial Intelligence (AI), Blockchain and cyber security போன்ற திறன் உள்ள நிபுணர்களையும், நிபுணர் படிப்புக்கு படித்துக் கொண்டிருப்பவர்களையும் அதிகம் வேலைக்கு எடுக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள்.
முதலீடு 20%
இந்தியாவின் முன்னனி மனிதவள மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான Teamlease service நிறுவனமோ இந்த 2019-ல் சுமார் 2.5 லட்சம் பேர் ஐடி துறையில் வேலைக்கு எடுக்கப்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறது. அதோடு தற்போது ஐடி நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் திறனை வளர்க்க செய்யும் முதலீட்டுத் தொகையும் சுமார் 20% வரை அதிகரிக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள்.