டெல்லி: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் நிறுவனத்தை எப்படி இயக்குவது என தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ. அதே நேரத்தில் Jet Airways நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது எஸ்பிஐ.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் ஜெட் ஏர்வேல் நிறுவனத்தின் பிரச்னைகள் வொவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. முதலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி இருந்த 8,500 கோடி ரூபாய் கடன் செலுத்தவில்லை எனத் தொடங்கிய பிரச்னை படிப்படியாக இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
அதன் பின் சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி இருப்பதால் எரிபொருள் நிரப்பப்படாது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முகத்தைக் காட்டியது, ஹெச் எஸ் பி சி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்தாதது, விமானங்களுக்கான குத்தகைத் தொகை திருப்பிச் செலுத்தாதது எனப் பட்டியல் நீள்கிறது. ஒரு பக்கம் இந்த சம்பவங்களுக்கு அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தங்கள் வியாபாரத்தை ஷார்ப்பாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒதுக்கீடு
ஏப்ரல் 26-ம் தேதியில் இருந்து டெல்லி மற்றும் மும்பையோடு பல்வேறு இந்திய நகரங்களை இணைக்கும் விதத்தில் 28 புதிய விமானங்களை ஸ்பைஸ் ஜெட் இயக்கப் போகிறார்களாம். நிதி நெருக்கடியால் தன் செயல்பாடுகளை நிறுத்தி இருக்கும் ஜெட் ஏர்வேஸின் விமான வழித் தடங்கள், பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸின் விமானங்கள் நிறுத்துவதற்கும், பறப்பதற்கும் உள்ள வழித் தடங்களை எல்லாம் ஸ்பைஸ் ஜெட் உட்பட பல்வேறு விமான சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கும் வேலையில் அரசுத் துறைகள் மூழ்கி இருக்கிறார்களாம்.
டிராஃபிக்கை சமாளிக்க
கோடை விடுமுறை காலம் வேறு நெருங்குவதால், நிறைய பயணிகள் விமானங்களைப் பயன்படுத்துவார்கள். இந்த விமானப் பயணிகளின் உச்ச எண்ணிக்கையை சமாளிக்கத் தான் இத்தனை வேகமாக பல்வேறு நிறுவனங்களுக்கு வழித் தடங்களை ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதிதாக இயக்க இருக்கும் விமானங்களை மும்பை - ஜெய்பூர் - மும்பை, மும்பை அம்ரித்சர் - மும்பை, மும்பை - மங்களூரூ - மும்பை, மும்பை கோவை - மும்பை என பிரித்து பிரித்து இயக்கப் போகிறார்களாம். அதோடு ஏற்கனவே இயக்கிக் கொண்டிருக்கும் மும்பை - பாட்னா - மும்பை, மும்பை -ஹைதராபாத் - மும்பை, மும்பை - கொல்கத்தா - மும்பை போன்ற வழித் தடங்களில் கூடுதலாக விமானங்களை இயக்கப் போகிறார்களாம்.
கொஞ்சமாவது குறையுமே
ஏற்கனவே மும்பை - டெல்லி - மும்பை வழித் தடத்தில் மூன்று விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஸ்பைஸ் ஜெட் மேலும் ஒரு புதிய விமானத்தை இயக்கப் போகிறார்களாம். அதோடு டெல்லி - பாட்னா - பெங்களூர் வழித் தடத்திலும் ஒரு விமானத்தை இயக்கப் போகிறார்களாம். "தற்போது இந்தியாவில் போதுமான விமான சேவைகள் இல்லாததால் அவதிப்படும், இந்திய விமானப் பயணிகளின் சிரமத்தை, ஸ்பைஸ் ஜெட் அறிவித்திருக்கும் புதிய விமானங்களால் குறைக்கும் என நம்புகிறோம்" என்கிறார் ஸ்பைச் ஜெட் நிறுவனத்தின் முதன்மை விற்பனை மற்றும் வருவாய் அதிகாரி ஷில்பா பாதியா.
நான் ஸ்டாப் விமானங்கள்
ஸ்பைஸ் ஜெட் உள்நாட்டில் மட்டும் இல்லாமல் பல வெளிநாடுகளுக்கு நான் ஸ்டாப் விமானங்களையும் அறிவித்திருக்கிறதாம். மும்பையில் இருந்து ஹாங்காங், ஜெடாஹ், துபாய், கொலும்பு, தாகா, ரியாத், பாங்காக், காத்மண்டு என பல்வேறு வழித் தடங்களில் வரும் மே 2019 இறுதிக்குள் இயக்கப் போகிறார்களாம். இந்த சர்வதேச வழித் தடங்களில் போயிங் 737 - 800NG ரக விமானங்களைக் களம் இறக்கப் போகிறார்களாம்.